Published : 13 Mar 2015 07:56 PM
Last Updated : 13 Mar 2015 07:56 PM

40 ஆண்டில் கண்டிராத சோகத்துடன் விடைபெற்ற இங்கிலாந்து

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 40 ஆண்டு கால வரலாற்றில், இதுவரை கண்டிராத சோகத்துடன் இலங்கிலாந்து அணி விடைபெற்றது.

எனினும், 38-வது லீக் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்த இங்கிலாந்து ஆறுதல் வெற்றியுடன் விடைபெற்றிருக்கிறது.

காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்ட இங்கிலாந்து, தனது கடைசி லீக் ஆட்டத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

இந்த உலகக் கோப்பையின் லீக் சுற்றில் 6 ஆட்டங்களில் விளையாடிய இங்கிலாந்து அணி, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளை மட்டுமே வீழ்த்தியது. எஞ்சிய 4 ஆட்டங்களிலும் தோல்வி கண்டது.

40 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து அணி, டெஸ்ட் விளையாடும் அணிகளுக்கு எதிராக ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாததோடு, அடுத்த சுற்றுக்கும் முன்னேறாமல் வெளியேறியிருப்பது இதுவே முதல்முறை என்பது அந்த அணிக்கும், அந்த அணியின் ரசிகர்களுக்கு மிகுந்த சோகம் அளிக்கும் அம்சம்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்தது. அந்த அணி 36.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்திருந்தபோது 3 முறையாக மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அணியின் இன்னிங்ஸ் முடிக்கப்பட்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷபியுல்லா 30 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து தரப்பில் ஜோர்டான், போபாரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 25 ஓவர்களில் 101 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி, 18.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இயான் பெல் 52, ஜேம்ஸ் டெய்லர் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக அலெக்ஸ் ஹேல்ஸ் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x