Published : 22 Mar 2015 12:39 PM
Last Updated : 22 Mar 2015 12:39 PM

ஊனத்தை வென்ற கப்டிலும் எண்கள் சொல்லும் சிறப்புகளும்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4-வது காலிறுதியில் 143 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி 7-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது நியூஸிலாந்து. அதேநேரத்தில் உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் மிக மோசமான தோல்வியை சந்தித்த அணி என்ற முத்திரையோடு வெளியேறியுள்ளது மேற்கிந்தியத் தீவுகள்.

இரட்டை சதமடித்த 5-வது வீரர்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 237 ரன்கள் குவித்ததன் மூலம் உலகக் கோப்பையில் ஓர் ஆட்டத்தில் அதிக ரன்கள் குவித்தவர், உலகக் கோப்பையில் இரட்டை சதமடித்த 2-வது வீரர், சர்வதேச அளவில் இரட்டை சதமடித்த 5-வது வீரர் என்ற சாதனைகளை படைத்துள்ளார் மார்ட்டின் கப்டில்.

இதுவரை 3,643 ஆட்டங்கள் விளையாடப்பட்டுள்ள ஒருநாள் போட்டி வரலாற்றில் இரட்டை சதமடித்த 5-வது வீரர் என்ற பெருமையை பெற்றிருப்பதோடு, ஓர் ஆட்டத்தில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் ரோஹித் சர்மாவுக்கு (264) அடுத்தபடியாக 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதுமட்டுமின்றி ஓர் ஆட்டத்தில் அதிக ரன்கள் குவித்த நியூஸிலாந்து வீரர் என்ற பெருமையும் அவர் வசமாகியுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் நியூஸிலாந்து எடுத்த ரன்களில் 60.5 சதவீதம் கப்டிலால் எடுக்கப்பட்டதாகும்.

நேற்றைய ஆட்டத்தில் 11 சிக்ஸர், 24 பவுண்டரிகள் என 35 முறை பந்தை எல்லைக்கோட்டுக்கு அனுப்பினார் கப்டில். இதன்மூலம் அதிகமுறை பந்தை எல்லைக்கோட்டு விரட்டிய நியூஸிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றிருப்பதோடு, சர்வதேச அளவில் மேற்கண்ட சாதனையை புரிந்தவர்களில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் ரோஹித் சர்மா உள்ளார். அவர் இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் குவித்தபோது 42 முறை (9 சிக்ஸர், 33 பவுண்டரி) பந்தை எல்லைக்கு விரட்டியுள்ளார்.

ஊனத்தை வென்ற கப்டில்

இரட்டை சதமடித்த முதல் நியூஸிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்திருக்கும் மார்ட்டின் கப்டிலுக்கு இடது காலில் 3 விரல்கள் கிடையாது. பெருவிரலும், அதற்கடுத்த விரலும் மட்டுமே உள்ளது.

அவர் தனது 13-வது வயதில் இயந்திர பளுதூக்கியில் சிக்கியதில் காலின் 3 விரல்கள் நசுங்கின. அதை சரி செய்வதற்கு கடுமையாக முயற்சித்தபோது தோல்விதான் மிஞ்சியது. அதனால் அவருடைய 3 விரல்களும் அகற்றப்பட்டன.

விரல்களை இழந்த துக்கம் தாளாமல் மனம் உடைந்தபோதும், காயம் குணமடைந்தபிறகு நடக்கத் தொடங்கிய கப்டில், தன்னால் எந்தப் பணியையும் செய்ய முடியும் என்பதை உணர்ந்தார். அது முன்பைவிட கடுமையாக உழைக்கத் தூண்டியது. அதன் காரணமாக புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் பெற்ற அவர் இப்போது உலகக் கோப்பையில் சதமடித்து சாதித்திருக்கிறார்.

இதன் மூலம் சாதனைக்கு ஊனம் தடையாக இருக்காது என்பதை அவர் நிரூபித்துள்ளார். அவருக்கு இரண்டு விரல்கள் மட்டுமே இருப்பதால் 'டூ டோஸ்' என்ற பட்டப் பெயர் சொல்லி அவரை அழைக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x