Last Updated : 24 Mar, 2015 09:47 AM

 

Published : 24 Mar 2015 09:47 AM
Last Updated : 24 Mar 2015 09:47 AM

காலிறுதிப் போட்டிகள் - காணாமல்போன விறுவிறுப்பு

பதிநான்கு அணிகள் ஒரு மாத காலம் போராடிய பிறகு 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு வந்தன. கடுமையான போட்டிகளும் புதுப்புது சாதனைகளும் எதிர்பாராத திருப்பங்களும் கணிக்கக்கூடிய போட்டிகளுமாகக் கலவையாக நடந்துவந்த 2015 உலகக் கோப்பைப் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டிவிட்டது என்று ரசிகர்கள் நினைத்தார்கள்.

ஆனால் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட காலிறுதி ஆட்டங்கள் சப்பென்று ஆகி ரசிகர்களை ஏமாற்றிவிட்டன. நான்கு போட்டிகளும் முடிவதற்கு முன்பே முடிவு தெரிந்த உப்புச் சப்பற்ற ஆட்டங்களாகிவிட்டன. இத்தனைக்கும் காலிறுதிப் போட்டிகளில் இந்திய வங்கதேசம் போட்டியைத் தவிர வேறு எந்தப் போட்டியும் புள்ளிவிவர அடிப்படையில் பார்த்தால் சமமற்ற மோதல் அல்ல. ஆனால் வென்ற அணிகள் செலுத்திய ஆதிக்கம் எதிரணிகளை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது.

தென்னாப்பிரிக்காவுக்கும் இலங் கைக்கும் இடையே நடந்த போட்டியை எடுத்துக்கொள்ளுங்கள். முதல் சுற்றில் அற்புதமாக ஆடிய இலங்கை அணி தென்னாப்பிரிக்காவுக்குப் பெரும் சவாலாக விளங்கும் எனக் கருதப்பட்டது. குமார் சங்ககாராவின் அசாத்தியமான ஆட்டமும் திலகரத்னே தில்ஷான், லஹிரு திரிமானி போன்றவர்களின் துணை யும் சேர்ந்து இலங்கையை அரையிறு திக்கு வரக்கூடிய அணியாக முன்னிறுத் தின.

தென்னாப்பிரிக்க அணி உலகக் கோப்பையில் இதுவரை நாக் அவுட் சுற்றை ஒருமுறைகூடத் தாண்டிய தில்லை. அபாரமான திறமைகள் கொண்ட அந்த அணியின் ஆட்டம் உலகமே வியக்கும் அளவுக்கு இருக்கும். ஆனால் முக்கியமான போட்டிகளில் நெருக்கடி யைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறி, தோற்றுப் பரிதாபமாக வெளியேறும்.

இதனாலேயே ‘திணறல் திலகம்’ எனப் பெயர் பெற்ற அணி அது. மாறாக, இலங்கையோ பெரிய போட்டிகளில் எப்போதுமே சிறப்பாக ஆடியிருக்கிறது. எனவே இலங்கையே அரை இறுதிக்குப் போகும் என்று பலரும் கணித்தார்கள்.

ஆனால் மார்ச் 17 அன்று புதிய வரலாறு படைக்கப்பட்டது. இலங்கை திக்கித் திணறி 133 ரன் எடுத்து ஆட்ட மிழந்தது. தென்னாப்பிரிக்கா அந்த ரன்களைச் சர்வ சாதாரணமாக எடுத்து அரையிறுதிக்குச் சென்றது.

இந்தியா-வங்கதேச ஆட்டம்

இந்திய வங்கதேசப் போட்டியைப் பொறுத்தவரை தொடக்கத்திலிருந்தே பரபரப்பு எதுவும் இல்லை. இந்தியா அரை யிறுதியில் பாகிஸ்தானைச் சந்திக்குமா ஆஸ்திரேலியாவோடு மோதுமா என தாயக்கட்டை உருட்டத் தொடங்கி விட்டார்கள் ரசிகர்கள்.

இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு என்பது கிட்டத்தட்ட உறுதி என்றே ரசிகர்களும் வல்லுனர் களும் உணர்ந்தார்கள் போட்டிக்கு முந்தைய அலசல்கள், முன்னோட் டங்கள், வாட்ஸ் அப் போன்ற ஊடகங் கள் மூலம் பகிர்ந்து கொள்ளப் பட்ட தகவல்கள் ஆகி யவை இதை உறுதிசெய்தன.

போட்டியும் அதற் கேற்பவே அமைந்தது. அஜிங்க்ய ரஹானே, விராட் கோலி ஆகியோர் எதிர் பார்த்த அளவு ஆடவில்லை என்றாலும் ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்தியாவைப் பாது காப்பான இடத்துக்குக் கொண்டு சேர்த்தார்கள். 303 என்னும் இலக்கை நோக்கி ஆடிய வங்கதேச அணியை 193 ரன்னுக்குள் இந்தியப் பந்து வீச்சாளர்கள் சுருட்டினார்கள். தொடர்ந்து ஏழாவது முறையாக எதிரணியை ஆல் அவுட் ஆக்கும் சாதனையைப் புரிந்தார்கள்.

பெரிய சவால் எதுவும் இல்லாத இந்தப் போட்டியில் வங்கதேசப் பந்து வீச்சாளர் ரூபெல் ஹுசைன் கோலியைப் பார்த்துக் கத்தி உணர்ச்சிவசப்பட்டதும் நடுவரின் முடிவுகளை வைத்துச் சர்ச்சை எழுப்பியதும் செய்திகளின் பரபரப்புக்கு மட்டுமே உதவின.

30 ஓவர்வரை அதிக விக்கெட்களை இழக்காமல் இருப்பது என்னும் வியூ கத்தை இந்தியா பெருமளவில் வெற்றிகர மாகக் கடைப்பிடித்துவருகிறது. மட்டை யாளர்களில் ஓரிருவர் சறுக்கினாலும் மற்றவர்கள் காப்பாற்றும் வழக்கம் தொடர் கிறது. இவை இரண்டும் நம்பிக்கை அளிக்கின்றன.

ஆஸி. - பாக். ஆட்டம்

ஒப்பீட்டளவில் ஆஸ்தி ரேலியா வலுவான அணியாக இருந்தாலும் பாகிஸ்தான் கணிக்க முடியாத அணி என் பதால் போட்டிக்கு முன்பு சற்றுப் பரபரப்பு நிலவியது. தென்னாப்பிரிக்காவை வென்ற விதத்தை வைத்துப் பார்க்கும் போது இந்த அணியின்மீது நம்பிக்கை யும் பிறந்தது. ஆனால் அந்த நம்பிக்கை யைச் சிதறடிக்கும் விதத்தில் பாகிஸ் தானின் ஆட்டம் அமைந்தது.

213 ரன் என்பது எந்த அணிக்கு எதிராகவும் நல்ல இலக்கு அல்ல. ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை சொல்லவே வேண்டாம். வஹாப் ரியாஸின் அனல் பறக்கும் பந்து வீச்சுக்கு விழுந்த விக்கெட்கள்தான் பாகிஸ்தானுக்கு மிஞ்சிய ஒரே ஆறுதல்.

கம்பீரமான பிரவேசம்

நியூஸிலாந்து அணியும் ஆட்டத்தை முற்றிலுமாக ஆதிக்கம் செலுத்திக் கம்பீரமாக அரையிறுதிக்குள் நுழைந் தது. ஒரு நாள் அபார ஆட்டம், அடுத்த நாள் தடுமாற்றம் என்று ஊசலாடிக் கொண்டிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு முதலில் மட்டை பிடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பந்து வீச்சில் கூர்மையும் கட்டுக்கோப்பும் இல்லை.

மார்ட்டின் கப்டிலின் வேகமும் விவேக மும் கூடிய பொறுப்பான ஆட்டத்தால் அந்த அணி 393 ரன்களைக் குவித்து வசதியான இடத்தில் அமர்ந்து கொண்டது. அசாத்தியமான இந்த இலக்கைத் துரத்திய மேற்கிந்திய தீவுகள் ஆவேசமாக ஆடினாலும் விக்கெட்டு களைப் பறிகொடுத்துத் தோல்வியைத் தழுவியது. முதுகு வலியோடு அவதிப் பட்டுக்கொண்டு ஆடிய கிறிஸ் கெயில் 33 பந்துகளில் 61 ரன் அடித்தார்.

15 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த சாமுவேல்ஸ் டேனியல் வெட்டோரியின் அதி அற்புதமான கேட்சுக்குப் பலியானார். சாமுவேல்ஸும் கெயிலும் கொஞ்ச நேரம் நியூஸிலாந்தை மிரட்டிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இவர்கள் ஆட்டமிழந்தாலும் சமி, ரஸ்ஸல், ஹோல்டர் ஆகியோர் ஆவேசமாக ஆட, மே.இ. அணி 30 ஓவர்களுக்குள் 250 ரன்னை எட்டியது. ஓவருக்கு 8.19 ரன். தேவைப்பட்ட ரன் விகிதம் 7.86. ரன் வேகத்துக்கு இணையாக விக்கெட்டும் விழுந்திருக்காவிட்டால் மே.இ. தீவு வரலாறு படைத்திருக்கலாம்.

மே.இ. தீவுகள் அணியின் பிரச் சினையே அதன் சீரற்ற தன்மைதான். இதே பிரச்சினைதான் பாகிஸ்தானையும் பீடித்தது. பெருமளவில் சீராக ஆடிக் கொண்டிருந்த இலங்கை நெருக்கடியில் சொதப்பியது.

காலிறுதியில் தோற்ற அணிகள் மேலும் சிறப்பாக ஆடியிருக்க முடியும். அப்படி ஆடாததால் நான்கு ஆட்டங் களும் முடிவதற்கு முன்பே முடிவு தெரிந்த ஆட்டங்களாக அமைந்து விட்டன. சிறிய அணிகள் எனச் சொல்லப் படும் அயர்லாந்து போன்ற சில அணிகள் முதல் சுற்றுப் போட்டிகளில் போராடிய அளவுக்குக்கூட பெரிய அணிகள் காலிறுதிச் சுற்றில் போராடவில்லை.

இந்நிலையில் 2015 உலகக் கோப்பையின் காலிறுதிச் சுற்றை மந்தமான அத்தியாயம் என்றுதான் சொல்ல வேண்டும். அரை இறுதியிலாவது இந்த நிலை மாறுமா என்பது இன்னமும் களத்தில் நிற்கும் அந்த நான்கு அணிகளின் கைகளில்தான் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x