Published : 11 Apr 2014 12:23 PM
Last Updated : 11 Apr 2014 12:23 PM

சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதியில் பேயர்ன், அட்லெடிகோ - மான்செஸ்டர் யுனைடெட், பார்சிலோனா அவுட்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் பேயர்ன் மூனிச், அட்லெடிகோ மாட்ரிட் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. பேயர்ன் மூனிச் தொடர்ந்து 3-வது ஆண்டாக அரையிறுதியை உறுதி செய்துள்ளது.

மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற காலிறுதியின் முதல் சுற்றில் மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்திருந்த பேயர்ன் மூனிச், தனது சொந்த மண்ணில் நடைபெற்ற காலிறுதியின் 2-வது சுற்றில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டதன் மூலம் 4-2 என்ற கோல் விகித அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறியது.

ஜெர்மனியின் மூனிச் நகரில் நடைபெற்ற காலிறுதியின் 2-வது சுற்றில் பேயர்ன் மூனிச்சும், மான்செஸ்டர் யுனைடெட் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் பேயர்ன் மூனிச் அணி முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தியபோதும், கோலடிக்கவில்லை.

இதையடுத்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் பறந்து வந்த பந்தை தரையில் விழுவதற்கு முன்னதாகவே பேட்ரைஸ் இவ்ரா கோலாக்க, மான்செஸ்டர் யுனைடெட் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனாலும் இந்த முன்னிலை 2 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. அடுத்த 2-வது நிமிடத்தில் பேயர்ன் வீரர் மரியோ மான்ட்ஸூகிக் கோலடித்து ஸ்கோரை சமன் செய்தார்.

இதன்பிறகு தொடர்ந்து அபாரமாக ஆடிய பேயர்ன் அணிக்கு 2-வது கோலை அடித்தார் தாமஸ் முல்லர். இந்த கோல் 68-வது நிமிடத்தில் அடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 76-வது நிமிடத்தில் அர்ஜென் ராபன் கோலடிக்க, பேயர்ன் மூனிச் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

அட்லெடிகோ வெற்றி

மற்றொரு காலிறுதியில் அட்லெடிகொ மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை தோற்கடித்ததன் மூலம் 2-1 என்ற கோல் விகித அடிப்படையில் அரையிறுதியை உறுதி செய்தது.

பார்சிலோனாவில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையிலான காலிறுதியின் முதல் சுற்று 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்த நிலையில், காலிறுதியின் 2-வது சுற்று மாட்ரிட் நகரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் 5-வது நிமிடத்தில் அட்லெடிகோ மாட்ரிட் அணியின் கோகே கோலடிக்க, அதுவே வெற்றிக் கோலாக அமைந்தது. இந்தக் கோலை அடித்த அடுத்த 20 நிமிடங்களுக்கு அட்லெடிகோ அணியின் ஆட்டத்தில் அனல் பறந்தது.

இதன்பிறகு பார்சிலோனா அணிக்கு ஒரு சில கோல் வாய்ப்புகள் கிடைத்தாலும், அதற்கு பலன் கிடைக்காமல் போகவே, அட்லெடிகோ 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டு அரையிறுதியை உறுதி செய்தது.

கடந்த 40 ஆண்டுகளில் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அட்லெடிகோ அணி அரையிறுதிக்கு முன்னேறுவது இதுவே முதல்முறை. அதேநேரத்தில் பார்சிலோனா அணி தொடர்ந்து 7-வது ஆண்டாக அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x