Published : 12 Jan 2015 11:02 AM
Last Updated : 12 Jan 2015 11:02 AM

கிறிஸ் கெயில் தாண்டவத்தில் மே.இ.தீவுகள் அணி மீண்டும் உலக சாதனை வெற்றி

வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டி-20 போட்டியில் கிறிஸ் கெயில் அதிரடியில், அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி உலக சாதனை வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட் செய்து டுபிளேசியின் அதிரடி 119 ரன்களுடன் (56 பந்துகள் 11 பவுண்டரி 5 சிக்சர்கள்) தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது.

அதைத் தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி, கிறிஸ் கெயில் ஆடிய தாண்டவத்தினால் 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்து, உலக சாதனை துரத்தலை நிகழ்த்தியது. டி20 கிரிக்கெட்டில் இதுவே அதிகபட்ச ரன் துரத்தல் என்ற வகையில், உலக சாதனை புரிந்த மே.இ.தீவுகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரைக் கைப்பற்றியது.

இதற்கு முன்னர் 211 ரன்களை துரத்தலில், இலங்கைக்கு எதிராக எடுத்து இந்தியா வெற்றி பெற்றதே உலக சாதனை துரத்தலாக இருந்து வந்தது.

இதே வாண்டரர்ஸ் மைதானம், 2005/06 தொடரின்போது உலகின் தலைசிறந்த ஒருநாள் போட்டியைக் கண்டது. அன்று ஆஸ்திரேலியாவின் 434 ரன்களை தென் ஆப்பிரிக்கா வெற்றிகரமாக விரட்டி 438 ரன்களை எடுத்தது இன்றும் உலக சாதனை ஒருநாள் போட்டியாக இருந்து வருகிறது.

டாஸ் வென்ற மே.இ.தீவுகள் கேப்டன் டேரன் சமி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். டு பிளேசிஸ் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் 3-வது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்து 49 பந்துகளில் எடுத்த 103 ரன்கள் மூலம் நேற்றைய ஆட்டம் சூடு பிடித்தது.

டு பிளேசிஸ் 11 பவுண்டரிகள் 5 சிக்சர்களை விளாச, டேவிட் மில்லர் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 26 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். இதில் லாங் ஆன் திசையில் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த மேல்வரிசைகளில் 4ஆம் வரிசையைத் தாண்டிப் போய் ஒரு சிக்சர் விழுந்தது. இது மிகப்பெரிய சிக்சராக அமையலாம் என்று தெரிகிறது.

டு பிளேசிஸ் தனது சதத்தை 46 பந்துகளில் சதம் கடந்தார். பிறகு 56 பந்துகளில் 119 ரன்கள் எடுத்து 19-வது ஓவரில் ஹோல்டரிடம் வீழ்ந்தார். ஆனால் அப்போதே ஸ்கோர் 222 ரன்களை எட்டியது.

தென் ஆப்பிரிக்கா கடைசியில் 20 ஓவர்களில் 231 ரன்கள் எடுத்தது. விரட்டலில் சற்றும் மனம் தளராத மே.இ.தீவுகளின் தொடக்க வீரர்களான டிவைன் ஸ்மித், கிறிஸ் கெயில் தென் ஆப்பிரிக்காவைக் காட்டிலும் மேலும் ஆக்ரோஷமான அதிரடியில் தொடங்கியது. டிவைன் ஸ்மித் 4 பவுண்டரிகளுடன் 9 பந்துகளில் 17 ரன்களை விளாசினார். ஆனால் மெர்சண்ட் டீ லாங்கே பந்தில் எல்.பி. ஆகி வெளியேறினார்.

அதுவரை அமைதி காத்த கிறிஸ் கெயில், சாமுயெல்ஸ் இணைய இருவரும் தங்களடு அனாயாச மட்டை சுழற்றலைத் தொடங்கினர். 6 ஓவர் பவர் பிளேயில் 86 ரன்கள் எட்டப்பட்டது. இருவரும் 21 பந்துகளில் அரைசதக் கூட்டணி அமைத்தனர். கிறிஸ் கெயில் 20 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்சர்களுடன் அரைசதம் எட்டினார். கெயில் தனது அசகாய ஆட்டத்தைத் தொடர சாமுயெல்ஸ் முறையான கிரிக்கெட் ஷாட்களுடன் 39 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 60 ரன்கள் எடுத்தார்.

கெய்லின் அதிரடிக்கு தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் கைல் அபாட் தனது தொடர்ச்சியான புல்டாஸ்களால் உதவி புரிந்தார். ஒரே ஓவரில் 22 ரன்கள் வந்தது. இதில் 4 பவுண்டரிகள் புல்டாஸாக அமைந்தது. ஒருவேளை புல்டாஸினால் 4-ம் பவுண்டரியாக அமைந்தது. லெந்த் பாலாக இருந்திருந்தால் சிக்சராக ஆகியிருக்கலாம் என்று அபாட் கூறலாம்.

இந்தக் கட்டத்தில் 3 ஒவர்களில் 46 ரன்கள் விளாசப்பட்டது. தென் ஆப்பிரிக்க வீச்சாளர்கள் டேவிட் வீஸ் மற்றும் டீ லாங்கே ஆகியோர் கெய்லுக்கு விருந்து படைக்க அவரோ பவுண்டரி, சிக்சர் விருந்து கொடுத்தார். இம்ரான் தாஹிர் நன்றாக வீசினார். ஆனால் பாங்கிசியோ மற்றும் ஜஸ்டின் ஆன்டாங் ஆகியோர் பந்துவீச்சை கெயில் பதம் பார்த்தார். ஆன்டாங் ஒரு ஓவரில் 17 ரன்களைக் கொடுத்தார்.

2-வது விக்கெட்டுக்காக 11.5 ஓவர்களில் 152 ரன்கள் சேர்க்கப்பட்டது. இந்நிலையில், 41 பந்துகளில் 9 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 90 ரன்கள் அடித்த கிறிஸ் கெயில் விக்கெட்டை தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் வீஸ் வீழ்த்தினார். முதல் போட்டியில் கெயில் வீழ்ந்தவுடன் 6 விக்கெடுகளை 50 ரன்களுக்கு இழ்ந்த மே.இ.தீவுகள் நேற்றும் 171/1 என்ற நிலையிலிருந்து 17.4 ஓவர்களில் 209/6 என்று சரிவு கண்டது. கெய்லை அடுத்து சாமுவேல்ஸ், பொலார்ட், ரஸல், பிராவோ ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர்.

ஆனால் டேரன் சாமி 7 பந்துகளில் 20 ரன்களை அடித்து மெர்சண்ட் டீ லாங்கே பந்தை மிட்விக்கெட் ஸ்டாண்டிற்கு அனுப்பி உலகசாதனை விரட்டலை நிறைவு செய்தார்.

4 ஓவர்களில் 68 ரன்கள் கொடுத்து கைல் அபாட் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் கொடுத்த வீச்சாளர் ஆனார். இதற்கு முன்னர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 64 ரன்கள் கொடுத்ததே அதிகமாக இருந்தது. மீண்டும் ஆட்ட நாயகனாக கிறிஸ் கெயில் தேர்வு செய்யப்பட்டார். 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மே.இ.தீவுகள் கைப்பற்றியது.

"கிரிக்கெட் ஆட்டம் வெற்றி பெற்றது” என்று கேப்டன் டேரன் சாமி கூற, தெ.ஆ. கேப்டன் டு பிளேசீயோ, தனது சதம் வீணானது குறித்து ‘கசப்பான இனிமை’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x