Published : 17 Apr 2014 01:00 PM
Last Updated : 17 Apr 2014 01:00 PM

ஐபிஎல் 7: மும்பைக்கு எதிராக கொல்கத்தா அபார வெற்றி

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக காலிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அபுதாபியில், ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் கொல்கத்தா மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. துவக்க வீரர்களாக காம்பிர் மற்றும் காலிஸ் களமிறங்கினர்.

8 பந்துகளை சந்தித்த காம்பிர் மலிங்கா பந்தில் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த மனீஷ் பாண்டே, காலிஸுடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை மும்பையின் பந்துவீச்சை சுலபமாக எதிர் கொண்டனர். பவுண்டரிகளும், சிக்ஸர்களும் தொடர்ந்து வரத் தொடங்கின. பாண்டே 42 பந்துகளிலும், காலிஸ் 37 பந்துகளிலும் அரை சதம் கண்டனர்.

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக காலிஸ் 46 பந்துகளில் 72 ரன்களை குவித்திருந்தார்.

பின்னர் களமிறங்கிய மும்பை அணிக்கு மோனே மார்கலின் பந்து வீச்சு பெரிய சவாலாக அமைந்தது. அவர் வீசிய இரண்டு ஓவர்களிலுமே பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்கத் தவறினார்கள். அடுத்து பந்து வீச வந்த நட்சத்திர பவுலரான சுனில் நரைன், தனது முதல் ஓவரிலேயே ஹஸ்ஸியை ஆட்டமிழக்கச்செய்தார்.

தொடர்ந்து கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சால் மும்பை பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க முடியாமல் திணற, கடைசி ஓவரில் 47 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு அந்த அணி தள்ளப்பட்டது. 20 ஓவர்கள் முடிவில் மும்பை 7 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. கொல்கத்தா அணியின் சுனில் நரைன் 20 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

72 ரன்கள் குவித்த காலிஸ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x