Published : 14 Jul 2019 02:44 PM
Last Updated : 14 Jul 2019 02:44 PM
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனிக்கு பாடகி லதா மங்கேஷ்கர் ஆதரவு அளித்த நிலையில், இப்போது பாடலாசிரியர் ஜாவித் அக்தரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதியில் நியூஸிலாந்து அணியிடம் 18 ரன்னில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியது.
இதில் தோனியின் பேட்டிங் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இருந்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மந்தமாக தோனி பேட் செய்ததும், நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் அடித்து ஆடாமல் பேட் செய்ததும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்திய அணி உலகக்கோப்பையில் தோல்வி அடைந்த பின், தோனியின் ஓய்வு குறித்து சமூக ஊடகங்களில் கடுமையாக கருத்து முன்வைக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டது. ஆனால், ஓய்வு குறித்து தோனி ஏதும் தெரிவிக்கவில்லை. இப்போதைக்கு ஓய்வு குறித்து சிந்திக்கவில்லை என்று தோனி பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இதனிடையே இந்தியப் பாடகியும், புகழ்பெற்றவருமான லதா மங்கேஷ்கர் தோனிக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.அதில், "கடந்த சில நாட்களாக நீங்கள் கிரிக்கெட்டில் ஓய்வு பெறத் திட்டமிட்டு இருக்கும் செய்தி அறிந்தேன். தயவுசெய்து அவ்வாறு சிந்திக்காதீர்கள் தோனி. இந்த தேசத்துக்கு நீங்கள் தேவை. இது என்னுடைய வேண்டுகோளும்கூட. உங்கள் சிந்தனையில் ஓய்வு எனும் விஷயத்தை நீங்கள் அனுமதிக்கவே கூடாது" எனத் தெரிவித்திருந்தார்.
இப்போது பாடலாசிரியர் ஜாவித் அக்தரும் தோனிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பான தன்ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், "நடுவரிசை பேட்ஸ்மேன் அல்லது விக்கெட் கீப்பர் தோனி முழுவதுமாக நம்பிக்கைக்குரியவர். நம்பத்தகுந்த வீரர். கிரிக்கெட் போட்டியின் சூழலையும், ஆட்டத்தின் தன்மையையும் புரிந்து கொள்ளக்கூடியவர் என்பதால் அணிக்கு கூடுதல் பலம். கேப்டன் கோலியும் போதுமான அளவு தோனியை ஏற்றுக்கொண்டுள்ளார். இன்னும் தோனியிடம் ஏராளமான கிரிக்கெட் திறமைகள் உள்ளன. ஆதலால், தோனியிடம் ஓய்வு குறித்த பேச்சை பேசக்கூட கூடாது" எனத் தெரிவித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT