Published : 11 Jul 2019 04:06 PM
Last Updated : 11 Jul 2019 04:06 PM
எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் ஐசிசி உலகக்கோப்பை 2019-ன் 2வது அரையிறுதியில் இங்கிலாந்து பந்து வீச்சு படு ஆக்ரோஷமாக இருந்து வருகிறது, வார்னர், பிஞ்ச், ஹேண்ட்ஸ்கம்ப் விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா 28/3 என்று திணறி வருகிறது.
ஏற்கெனவே ஷார்ட் பிட்ச் எகிறு பந்து உத்தியில் வார்னரை வீழ்த்தியிருந்தார் வோக்ஸ். இந்நிலையில் ஹேண்ட்ஸ் கம்ப் உள்ளே வந்த பந்தில் பீட்டன் ஆகி பவுல்டு ஆகி 4 ரன்களில் வெளியேறினார்.
ஜோஃப்ரா ஆர்ச்சர் இன்னொரு முனையில் தனது ட்ரைவ் மறுப்பு லெந்த்தில் அசத்தி வருகிறார், கடும் வேகத்துடன் எகிறு பந்துகளை அவர் வீசி வருகிறார்.
இந்நிலையில் 8வது ஓவரை வீச வந்தார் ஜோப்ரா ஆர்ச்சர். அந்த ஓவரின் கடைசி பந்தை ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி எதிர்கொண்டார்.
அந்தப் பந்து 86 மைல்கள் வேகம் கொண்ட பவுன்சராக அமைய, கேரி அதனைத் தவிர்க்கும் முயற்சியில் பந்து தாடைப்பகுதியைத் தாக்க ஹெல்மெட் தலையிலிருந்து கழன்றது, பந்து தாடையின் சதையைக் கிழிக்க ரத்தம் கொட்டத் தொடங்கியது.
ஆஸ்த்ரேலிய ஓய்வறையில் ஒரே பதற்றம், ஆட முடியுமா, முடியாதா என்று கவலை ஏற்பட்டது, ஆனால் மைதானத்துக்கு வந்த உடற்மருத்துவர் வலது தாடை காயத்துக்கு மருந்து இட்டு பிளாஸ்திரி ஒட்டி விட்டார். அதன் பிறகு கேரி தற்போது தொடர்ந்து ஆடி வருகிறார். அவர் 9 ரன்களுடனும் ஸ்டீவ் ஸ்மித் 7 ரன்களுடனும் களத்தில் நிற்க ஆஸ்திரேலியா கடும் போராட்டங்களுக்கு இடையில் 12 ஓவர்களில் 29/3 என்று தடுமாறி வருகிறது.
இங்கிலாந்து பந்து வீச்சு ஆக்ரோஷத்தின் உச்சத்தில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT