Published : 03 Jul 2019 11:14 AM
Last Updated : 03 Jul 2019 11:14 AM

இப்படி ஓர் அர்ப்பணிப்பான ரசிகரை நான் பார்த்ததேயில்லை: 87 வயது மூதாட்டியிடம் ஆசி பெற்ற கோலி நெகிழ்ச்சி

வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தின்போது மைதானத்தில் முன்வரிசையில் அமர்ந்து இந்திய அணியை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்த மூதாட்டியிடம் விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் ஆசிர்வாதம் பெற்றனர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தியா - வங்கதேசத்துக்கு இடையேயான போட்டி நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது.

ஆட்ட விறுவிறுப்புக்கு இடையே மைதானத்தின் முன்வரிசையில் அமர்ந்து இந்திய வீரர்களை உற்சாகப்படுத்திய 87 வயது ரசிகை சாருலதா படேல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்தியா 4, 6 விளாசும்போதெல்லாம் தன் கையிலிருந்த சிறிய பிளாஸ்டிக் ட்ரம்பட்டை வைத்து ஓசை எழுப்பி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார் சாருலதா பாட்டி.

இந்நிலையில், முதல் பாதி ஆட்டத்தை முடித்துவிட்டு வங்கதேசம் தனது ஆட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னால் இருந்த சிறிய இடைவேளையில் சாருலதா பாட்டியை விராட் கோலி சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார்.

சாருலதாவின் அருகே அமர்ந்து பேசி வாழ்த்து பெற்ற கோலி அவருடன் சேர்ந்து போட்டோக்களுக்கும் போஸ் கொடுத்தார்.

சாருலதா பாட்டி கோலியின் தலை மீது தனது கைகளை வைத்து ஆசிர்வாதம் செய்தார். பின்னர் பாசத்துடன் அவரை முத்தமிட்டார். ரோஹித் சர்மாவையும் அவர் ஆசிர்வாதம் செய்தார்.

தொடர்ந்து சிறிது நேரத்தில் சாருலதா பாட்டி குறித்து ட்விட்டரில் பதிவிட்ட கோலி, "போட்டிக்கு ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. குறிப்பாக சாருலதா படேல் ஜி-க்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவருக்கு 87 வயது. இதுவரை நான் இவரைப் போன்ற ஆர்வமுள்ள  அர்ப்பணிப்புள்ள ரசிகரைச் சந்தித்ததில்லை.

வயது வெறும் எண் மட்டுமே. ஆர்வம்தான் உங்களை எந்த எல்லையையும் தாண்டிச் செல்ல வைக்கும். சாருலதா பாட்டியின் ஆசியுடன் அடுத்த போட்டிக்கு முன்னேறியுள்ளோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

கோலியின் ட்வீட்டும், சாருலதா பாட்டியின் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த முறையும் இந்தியா வெல்லும்..

ஒருபுறம் இந்த நெகிழ்ச்சி சம்பவம் வைரலாகிக் கொண்டிருக்க இன்னொருபுறம் சாருலதா பாட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "1983-ம் ஆண்டில் கபில்தேவ் உலகக்கோப்பையை வென்றபோது நானும் அங்கே இருந்தேன்.

அதனால் இந்த முறையும் இந்தியா கோப்பையை வெல்லும். இந்திய கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்துக்கு விளையாட வரும்போதெல்லாம் நான் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வேன்.

விநாயகர் மீது பெரிய நம்பிக்கை கொண்டவள் நான். இந்தியா வெல்லும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. வீரர்களை நான் ஆசிர்வதிப்பேன்" எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x