Published : 07 Jul 2019 04:50 PM
Last Updated : 07 Jul 2019 04:50 PM

சென்னையில் கிரிக்கெட் விநாயகர் கோயில்: உலக கோப்பையை வெல்ல தோனி, கோலி, பும்ராவுக்கு ரசிகர்கள் பிரார்த்தனை

உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என நாடுமுழுவதும் ரசிகர்கள் ஏக்கத்துடன் இருக்கும் நிலையில் சென்னையில் ரசிகர்கள் கிரிக்கெட் விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

சென்னை அண்ணா நகரில் கிரிக்கெட் விநாயகர் கோயில் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியுள்ளன. இந்த கோயிலை அமைக்க ஏற்பாடு செய்தவர்கே.ஆர்.ராமகிருஷ்ணன் . கடந்த 2001-ல் அவர்களது குடியிருப்பு முன்பு விநாயகர் கோயில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது, இந்தியா- ஆஸி. டெஸ்ட் போட்டி நடந்த நேரம். நேரலையில் ஆட்டத்தைப் பார்க்கிறார் ராமகிருஷ்ணன். ஆஸி. அணி வெற்றிபெறும் நிலையில் இருக்கிறது. ‘போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், கிரிக்கெட் விநாயகர் என்றே பெயர் வைத்துவிடுகிறேன்’ என்று பிரார்த்திக்கிறார். இந்திய அணி வெற்றி பெற, ‘கிரிக்கெட் விநாயகர்’ என்றே பெயர் சூட்டப்படுகிறது.

பெயர் மட்டுமல்லாது, இவருக்கான வழிபாடும் வித்தியாசம். ‘ஓம் பவுண்டரி அடிப்போனே போற்றி, சிக்ஸர் அடிப்போனே போற்றி’ என்று தமிழில் 108 மந்திரங்களையும், ‘ஓம் விக்கெட் கீப்பராய நமஹ, ஓம் ஹேட்ரிக் லேனேவாலே நமஹ, ஓம் ஆல்ரவுண்டராய நமஹ’ என்று இந்தியில் 108 மந்திரங்களையும் தயாரித்து வைத்திருக்கிறார் ராமகிருஷ்ணன். தினந்தோறும் இந்த மந்திரங்களுடன் அர்ச்சனையும் நிவேதனம், தீபாராதனையும் கிரிக்கெட் விநாயகருக்கு உண்டு. இந்தியா பங்கேற்கும் போட்டிகள் என்றால் சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் நடத்துவார்.

மொத்தம் 6 விநாயகர் சிலைகள். நடுநாயகமாக இருக்கும் விநாயகர், இந்திய அணியின் 11 வீரர்களையும் குறிக்கும் விதமாக 11 தலைகள், ஒரு கையில் பேட், இன்னொரு கையில் பந்து, கால்களில் பாதுகாப்பு கவசம் என காட்சி தருகிறார். மற்றவர்கள் வலதுகை பேட்ஸ்மேன், இடதுகை பேட்ஸ்மேன், பவுலிங், கீப்பிங், ஃபீல்டிங் விநாயகர்கள். இவை மாமல்லபுரத்தில் பிரத்தியேகமாகச் செய்யச் சொல்லி பெறப்பட்ட சிலைகள்.

நாள் ஆக ஆக, கிரிக்கெட் விநாயகர் பிரபலமாகத் தொடங்கினார். இதையடுத்து, கிழக்கு அண்ணா நகர் அன்னை சத்யா நகரில் புது ஆவடி சாலையில் உள்ள ஸ்ரீபாளையத்தம்மன் கோயிலில் ஆலய நிர்வாகத்தினரின் அனுமதியுடன் கிரிக்கெட் விநாயகர் சிலைகள் கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டன.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடந்து வரும் நிலையில் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் எனக்கூறி ராமகிருஷ்ணன் மற்றும் அவருடன் சேர்ந்த மற்ற ரசிகர்களும் கிரிக்கெட் விநாயகர் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ராமகிருஷ்ணன் கூறுகையில் ‘‘கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது ஒவ்வொரு முறையும் விநாயகரை நாங்கள் வழிபட்டு வருகிறோம். விநாயகருக்காக கிரிக்கெட்டை வைத்தே மந்திரங்களும் உச்சரித்து வருகிறோம். உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து வரும் நிலையில் இந்திய அணி வெல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனை. சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ், அமர்நாத், ஸ்ரீகாந்த், கவுதம் கம்பீர், ராகுல் திராவிட், வீரேந்திர சேவாக் என பலருக்கும் கிரிக்கெட் விநாயகர் ஆசி வழங்கி, அவர்கள் சிறப்பாக விளையாட அருள் புரிந்தார். அதுபோலவே விராட் கோலி, தோனி, பும்ராவுக்கு கிரிக்கெட் விநாயகர் அருள் வழங்குவார். எனவே இந்திய அணி உலக கோப்பையை வெல்வது உறுதி’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x