Published : 04 Jul 2019 05:00 PM
Last Updated : 04 Jul 2019 05:00 PM
இங்கிலாந்து அணி நியூஸிலாந்து அணியை நேற்று செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் 119 ரன்களில் வீழ்த்தியதையடுத்து பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்புகளுக்கு ஆணியறையப்பட்டது.
வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தானுக்கு இருக்கும் ஒரே போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட் செய்து 311 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். பாகிஸ்தான் முதலில் பந்து வீச நேரிட்டால் முதல் பந்து வீசுவதற்கு முன்பாகவே அரையிறுதி சாத்தியமற்ற வாய்ப்பிலிருந்தும் வெளியேறும். இத்தகைய விசித்திர நிலைமை அந்த அணிக்கு.
இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் மொகமது யூசுப் உள்நாட்டுத் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் கூறும்போது, “பாகிஸ்தான் ஏற்கெனவே வெளியேறிவிட்டது இதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ஆனால் வங்கதேச அணி மீது இடிவிழுந்தால் அதனால் அவர்கள் விளையாட முடியாமல் போனால், அல்லது அவர்கள் ஒருவேளை அனைவரும் ஆடமுடியாத அளவுகு உடற்தகுதியை இழந்தால்.. ஒரு ஓவரில் 10 ரன்கள் எடுத்தால் போதும் என்ற நிலை பாகிஸ்தானுக்கு கிடைத்தால்... நாம் தகுதி பெறலாம்.
இப்போதைய நிலையில் சாத்தியமேயில்லை. எவ்வளவு கீழ்நிலையில் இருக்கும் கத்துக்குட்டி அணியுடன் ஆடினாலும் 316 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியாது. வேறு வழியில்லை எதிரணியினரை மின்னல் தாக்கத்தான் நாம் வேண்டிக்கொள்ள வேண்டும்” என்று மொகமது யூசுப் ‘ஜோக்’ அடித்ததாக பாகிஸ்தான் ஊடகச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT