Published : 04 Nov 2014 11:50 AM
Last Updated : 04 Nov 2014 11:50 AM

தென்னிந்திய அளவிலான ஹாக்கி: சென்னை ஒய்எம்சிஏ அணி வெற்றி

விருதுநகரில் தென்னிந்திய அளவில் 3 நாட்கள் நடைபெற்ற ஹாக்கி போட்டியில், சென்னை ஒய்எம்சிஏ விளையாட்டு விடுதி மாணவர் அணி கோப்பையை வென்றது.

விருதுநகர் மாவட்ட ஹாக்கி கழகம் மற்றும் கேவிஎஸ் பள்ளிகளின் 125-வது ஆண்டு விழாக் குழு சார்பில் நவம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலிருந்து பள்ளி அளவிலான 16 அணிகள் பங்கேற்றன.

நேற்று மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை ஒய்எம்சிஏ விளையாட்டு விடுதி மாணவர் அணியும், திருச்சி விளையாட்டு விடுதி மாணவர் அணியும் மோதின. இதில், 3-க்கு 1 என்ற கோல் கணக்கில் ஒய்எம்சிஏ விளையாட்டு விடுதி மாணவர் அணி வெற்றி பெற்றது. திருச்சி விளையாட்டு விடுதி மாணவர் அணி, மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள பாண்டியராஜபுரம் அரசு மதுரா சுகர் பள்ளி அணி, திருநெல்வேலி விளையாட்டு விடுதி மாணவர் அணி ஆகியன முறையே 2, 3, 4-வது இடங்களைப் பெற்றன.

மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், தமிழ்நாடு ஒலிம்பிக் கூட்டமைப்பின் துணைத் தலைவர் சோலை எம். ராஜா, மதுரை விளையாட்டு விடுதி மேலாளர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x