Last Updated : 30 Jun, 2019 05:11 PM

 

Published : 30 Jun 2019 05:11 PM
Last Updated : 30 Jun 2019 05:11 PM

பேர்ஸ்டோ சதம் : போராடி முதல் விக்கெட்டை வீழ்த்தியது இந்திய அணி: சாஹல், குல்தீப் பந்துகள் புரட்டியெடுப்பு

எட்ஜ்பாஸ்டனில் நடந்துவரும் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி கடுமையாகப் போராடி இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட்டை வீழ்த்தியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் வின்ஸ், மொயின் அலிக்கு  பதிலாக ஜேஸன் ராய், பிளங்கெட் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக அணியில் இடம் பெறுவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார்.

அதேபோல இந்திய அணியில் ஒருமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியில் விஜய் சங்கருக்கு பதிலாக  இளம் வீரர் ரிஷப் பந்த் வாய்ப்பு பெற்றுள்ளார். உலகக் கோப்பைப் போட்டிக்கு முதல் முறையாகதேர்வு செயயப்பட்டு, முதல்முறையாகவே ரிஷப் பந்த் விளையாடும் 11பேர் கொண்ட அணியில் தேர்வாகியுள்ளார். கருநீலம், ஆரஞ்சு வண்ணத்தில் உருவாக்கப்பட்ட புதிய ஆடையில் இந்திய அணி களமிறங்குகிறது

இங்கிலாந்து அணிக்கு ஜேஸன் ராய், பேர்ஸ்டோ ஆட்டத்தைத் தொடங்கினர். தொடக்கத்தில் இருந்தே இந்திய பந்துவீச்சை இருவரும் வெளுத்துவாங்கினார். ஷமி வீசிய முதல் ஓவரிலேயே ராய் இரு பவுண்டரிகள் அடித்தார். அதன்பின் இருவரும் ஓவருக்கு ஒரு பவுண்டரியை அடித்ததால், வேறு வழியின்றி 6-வது ஓவரை சாஹல் வரவழைக்கப்பட்டார்.

சாஹல் ஓவருக்கு தொடக்கத்தில் பயந்த ஜேஸன் ராய், பேர்ஸ்டோ அதன் பிறகு காட்டடி அடித்தனர். 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் சேர்த்தது இங்கிலாந்து.

ஹர்திக் பாண்டியாவீசிய 11-வது ஓவரில் பேர்ஸ்டோ பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். அதன்பின் சாஹல், குல்தீப், பாண்டியா மூவரின் பந்துவீச்சையும் ராயும், பேர்ஸ்ட்டோவும் துவம்ஸம் செய்து சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பந்துகள்பறந்தன. 15 ஓவர்களில் இங்கிலாந்து அணி 100 ரன்களை எட்டியது.

பேர்ஸ்டோ 56 பந்துகளிலும், ஜேஸன் ராய் 41 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். இருவரின் அதிரடியையும் கட்டுப்படுத்த முடியாமல் கேப்டன் விராட் கோலி திணறினார். இந்திய வீரர்கள் எப்படி பந்துவீசினாலும் ஓவருக்கு பவுண்டரி, சிக்ஸர் பறந்தது. 20 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது இங்கிலாந்து அணி. குறிப்பாக சாஹல், குல்தீப் பந்துகள் புரட்டி எடுக்கப்பட்டன. குல்தீப்புக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜாவை எடுத்திருக்கலாம்.

முதல் 10 ஓவர்களில் 47 ரன்களை எடுத்த இங்கிலாந்த அணி அடுத்த 10 ஓவர்களில் 98 ரன்கள் சேர்த்தது.

குல்தீப் யாதவ் வீசிய 23-வது ஓவரில் ஜேஸன் ராய் லாங்-ஆன் திசையில் தூக்கி அடிக்க முயற்சிக்க அது அங்கிருந்த ரவிந்திர ஜடேஜாவிடம் கேட்ச் ஆனது. ராய் 57 பந்துகளில் 2சிக்ஸர், 7பவுண்டரி உள்பட 66 ரன்களி்ல் ஆட்டமிழந்தார். மிகுந்த சிரமத்துக்குப்பின் ஜேஸன் ராய் விக்கெட்டை இந்திய வீரர்கள் கழற்றினர்.

அடுத்து ஜோ ரூட் களமிறங்கி பேர்ஸ்டோவுடன் சேர்ந்தார். தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக பேட் செய்த பேர்ஸ்டோ 90 பந்துகளில் சதம் அடித்தார். இது உலகக் கோப்பைப் போட்டியில் முதல் சதம் ஆகும். சர்வேச அளவில் 8-வது சதமாகும்.

26ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்துள்ளது இங்கிலாந்து அணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x