Published : 17 Aug 2017 05:52 PM
Last Updated : 17 Aug 2017 05:52 PM
டார்வினில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஜோஷ் ஹேசில்வுட் பவுன்சரில் வார்னரின் கழுத்தைப் பந்து தாக்கியது. இதனையடுத்து மருத்துவ சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு மூளை அதிர்ச்சி எதுவும் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
செவ்வாயன்று டார்வினில் ஆஸ்திரேலிய அணியினருக்கிடையே பயிற்சிப் போட்டி நடைபெற்றது இதில் ஜோஷ் ஹேசில்வுட் வீசிய பவுன்சரை வார்னர் ஹூக் செய்ய முயன்றார். ஆனால் பந்து சரியாகச் சிக்காமல் கழுத்தைப் பதம் பார்த்தது. உடனே வார்னர் கீழே சாய்ந்தார், ஆனால் உடனே அவரே எழுந்து நின்று யார் உதவியுமின்றி பெவிலியன் திரும்பினார் அவருக்கு ஐஸ் முதலுதவி செய்யப்பட்டது.
வங்கதேசத் தொடருக்காக ஆஸ்திரேலியா தயாராகி வரும் நிலையில் வார்னர் லெவன், ஸ்மித் லெவன் என்று இரு அணிகளாகப் பிரிந்து 3 நாள் பயிற்சிப் போட்டியில் ஆடினர். இதில் வார்னர் 2 ரன்களில் இருந்த போது ஹேசில்வுட் பவுன்சரில் காயமடைந்தார்.
இதனையடுத்து மூளையில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய நடத்தப்பட்ட சோதனையில் வார்னருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்தது.
வங்கதேசத்துக்கு ஆஸ்திரேலிய அணி வெள்ளியன்று புறப்படும் என்று தெரிகிறது. 2006-ம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியா அங்கு பயணம் மேற்கொள்கிறது, இம்முறை 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT