Published : 30 Aug 2017 05:03 PM
Last Updated : 30 Aug 2017 05:03 PM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 84 ரன்களையும் பிறகு 10 விக்கெட்டுகளையும் எடுத்து வங்கதேச வரலாற்று வெற்றிக்கு காரணகர்த்தாவான ஆட்ட நாயகன் ஷாகிப் அல் ஹசன் நேற்று இரவு தனக்கு வெற்றி குறித்த நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆட்டம் முடிந்து ஆட்ட நாயகன் விருது பெற்ற வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல்ஹசன் மைக்கில் வங்க மொழியில் ரசிகர்களிடம் பேசினார்.
“அணிக்காக பங்களிப்பு செய்வது பெருமைக்குரிய விஷயம். எங்களுக்கு மைதானத்துக்கு வந்து ஆதரவு தந்த ரசிகர்களுக்கு நன்றி.
இன்று எங்கள் மீது யார் நம்பிக்கை வைத்தார்கள் யார் நம்பிக்கை வைக்கவில்லை என்று தெரியவில்லை. குளிர்பான இடைவேளையின் போது நான் சக வீரர்களிடம் கூறினேன், இன்று நாம் வெற்றி பெறுவோம் என்று நமக்காக மைதானத்துக்கு வந்து போட்டியைப் பார்ப்பவர்களை நாம் கைவிட்டு விடக்கூடாது என்றேன்.
நேற்று இரவு வரை வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை எனக்கு இல்லை. உண்மையில் நான் நம்பவில்லை. ஆனால் என் மனைவி என்னிடம், ‘ஷாகிப், நீங்கள் நாளை வங்கதேசத்தை வெற்றி பெறச் செய்வீர்கள்’ என்று கூறினார். என் மீது நம்பிக்கை வைத்த என் மனைவிக்கு நன்றி” என்றார் ஷாகிப் அல் ஹசன் நெகிழ்ச்சியுடன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT