Published : 18 Aug 2017 10:43 AM
Last Updated : 18 Aug 2017 10:43 AM

ஸ்பானிஷ் சூப்பர் கோப்பையை ரியல் மாட்ரிட் அணி வென்றது

ஸ்பானிஷ் சூப்பர் கோப்பையின் 2-வது கட்ட ஆட்டத்தில் பார்சிலோனா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ரியல் மாட்ரிட் அணி கோப்பையை வென்றது.

கேம்ப் நவ் நகரில் நடைபெற்ற முதல் கட்ட ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற நிலையில் நேற்று முன்தினம் இரு அணிகளும் 2-வது கட்ட ஆட்டத்தில் மோதின. மாட்ரிட் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் அடிக்கப்பட்ட கோல்களையும் சேர்த்து சராசரி விகிதப்படி ரியல் மாட்ரிட் அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.

தடை காரணமாக கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த ஆட்டத்தில் களமிறங்கவில்லை. மேலும் முன்னணி வீரரான கரேத் பேலும் வெளியே அமர வைக்கப்பட்டிருந்த நிலையில் இளம் வீரரான மார்கோ அசென்சியோ அபார திறனை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 4-வது நிமிடத்திலேயே அவர், 30 அடி தூரத்தில் இருந்து அற்புதமாக கோல் அடித்து அனைவரையும் வியக்க வைத்தார்.

நெய்மர் இல்லாமல் தடுமாறி வரும் பார்சிலோனா அணி, எவ்வளவோ போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. 39-வது நிமிடத்தில் கரிம் பென்சிமா அடித்த கோலால் ரியல் மாட்ரிட் அணி முதல் பாதியில் 2-0 என முன்னிலை வகித்தது. 2-வது பாதி ஆட்டத்தில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர்களான லயோனால் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரஸ் ஆகியோரின் கோல் அடிக்கும் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. கடைசி வரை பார்சிலோனா அணி வீரர்களால் ஒருகோல் கூட அடிக்க முடியாமல் போனது அந்த அணி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. முடிவில் ரியல் மாட்ரிட் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. - ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x