Published : 25 Aug 2017 12:11 PM
Last Updated : 25 Aug 2017 12:11 PM
பல்லகிலேயில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் புதிர் ஸ்பின்னர் தனஞ்ஜயாவிடம் விராட் கோலி பவுல்டு ஆனார். தோனி, புவனேஷ் ஆகியோரது உறுதியான பேட்டிங்கினால் இந்திய அணி போராடி வெற்றி பெற்றது.
கோலி நேற்று தனது வழக்கமான 3-ம் நிலையில் களமிறங்கவில்லை. 4 ரன்களில் தனஞ்ஜயாவின் கூக்ளியில் பவுல்டு ஆனார். அவரது வழக்கமான ராஜ கவர் டிரைவ் ஸ்ட்ரோக்கில் பீட் ஆனார் கோலி.
இந்நிலையில் ஆட்டம் முடிந்தவுடன் பேசிய கோலி கூறியதவது:
மிகவும் விறுவிறுப்பான ஆட்டம். ரசிகர்களும், வீர்ர்களுக்குமே நல்ல பொழுதுபோக்கு, இறுதியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். 230 ரன்கள் விரட்டலில் இரண்டு 100 ரன்கூட்டணி விநோதமானதுதான்.
230 ரன் விரட்டலில் 110/1 எனும்போது அனைவருக்கும் பேட்டிங் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்பினோம். எங்களுக்கு வருத்தமொன்றுமில்லை.
நான் 3-ம் நிலையில் களமிறங்கியிருந்தாலும் கூட அந்தக் குறிப்பிட்ட பந்தில் நான் பவுல்டு ஆகியே இருப்பேன். தனஞ்ஜய அப்படி அபாரமாகவே வீசினார். நாங்கள் அவரை நல்ல லெக்பிரேக்குகள் வீசும் ஒரு ஆஃப் ஸ்பின்னர் என்று நினைத்தோம், ஆனால் அவரோ 4 விக்கெட்டுகளைக் கூக்ளியில் கைப்பற்றினார்.
அவருக்கு எதிராக அடுத்த முறை இன்னும் எச்சரிக்கையாக இருப்போம். சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்ததும், அவரிடம் உள்ள கட்டுப்பாடும் அபாரமானது, பாராட்டத்தகுந்தது.
இவ்வாறு கூறினார் விராட்.
உபுல் தரங்கா: நெருக்கமாக வந்து தோல்வி அடைந்தது ஏமாற்றமாக உள்ளது, 100 ரன்கள் இந்திய அணிக்குத் தேவை எனும்போது நிறைய முயற்சி செய்தோம். ஆனால் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. பவுலிங், பீல்டிங்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT