Published : 07 Nov 2013 04:15 PM
Last Updated : 07 Nov 2013 04:15 PM

ரோஹித், அஸ்வின் அபாரம்: இந்தியா 120 ரன்கள் முன்னிலை

தனது முதல் டெஸ்டில் களமிறங்கிய ரோஹித் சர்மாவில் அற்புதமான சதம் மற்றும் அஸ்வினின் பொறுப்பான ஆட்டத்தின் துணையுடன், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸ்சில், இந்தியா 120 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா 102 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 354 ரன்கள் குவித்திருந்தது.

சீறிய ஷில்லிங்ஃபோர்டு

இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) தனது முதல் இன்னிங்ஸ்சை தொடர்ந்தது.

தவாண் 23 ரன்களிலும், முரளி விஜய் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவருமே ஷில்லிங்ஃபோர்டு பந்துவீச்சில் பெவிலியன் திரும்பியன்.

அவர்களைத் தொடர்ந்து, புஜாரா 17 ரன்கள் எடுத்திருந்தபோது, காட்ரெல் பந்துவீச்சுக்கு இலக்கானார்.

ஏமாற்றிய சச்சின்

தனது 199-வது டெஸ்ட் களத்தில் இறங்கிய சச்சின் டெண்டுல்கர் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷில்லிங்ஃபோர்டு பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். இதனால், ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் மிஞ்சியது.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலியையும் மிக விரைவில் விரட்டினார் ஷில்லிங்ஃபோர்டு. கோலியால் மூன்று ரன்களே எடுக்க முடிந்தது.

பொறுப்பான தோனி

எதிர்முனையில் ரோஹித் சர்மா பாதுகாப்புணர்வுடன் விளையாட, அவருக்குத் துணையாக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி 63 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அணியை சரிவில் இருந்து மீட்க தன்னால் ஆனதைச் செய்தார் தோனி.

அறிமுக ஆட்டத்தில் அமர்க்கள சதம்

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் டெஸ்ட் களத்தில் இறங்கிய ரோஹித் சர்மா, அணியை சரிவில் இருந்து முழுமையாக மீட்டதுடன், ரன் எண்ணிக்கையில் வெகுவாக முன்னிலை வகிக்கவும் வித்திட்டார்.

அறிமுக ஆட்டத்திலேயே சதமடித்து அமர்க்களப்படுத்திய ரோஹித், 228 பந்துகளில் 127 ரன்கள் குவித்தார்.

அபார அஸ்வின்

ஒரு முனையில் ரோஹித் நிதானப் போக்குடன் ரன்களைச் சேர்த்துவர, மறுமுனையில் சற்றே அதிரடியுடன் ரன்களைக் குவித்து அணிக்கு உறுதுணைபுரிந்தார் அஸ்வின்.

களத்தில் இறங்கியதில் இருந்தே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வின் 148 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார்.

ரோஹித், அஸ்வின் இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த இருவரின் பங்களிப்பால், இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா 102 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 354 ரன்கள் குவித்திருந்தது. இது, மேற்கிந்திய தீவுகளின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட 120 ரன்கள் கூடுதலாகும்.

முன்னதாக, மேற்கிந்திய தீவுகள் தனது முதல் இன்னிங்ஸ்சில் 234 ரன்கள் எடுத்திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x