Published : 28 Feb 2014 11:20 AM
Last Updated : 28 Feb 2014 11:20 AM

ஐடிஎஃப்: அரையிறுதியில் 3 இந்தியர்கள்

பஞ்சாப் தலைநகர் சண்டீகரில் நடைபெற்று வரும் ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சனம் சிங், விஷ்ணுவர்தன், ஸ்ரீராம் பாலாஜி ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் சனம் சிங் 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸின் மத்தியாஸ் பார்கியூவைத் தோற்கடித்தார்.

விஷ்ணுவர்தன் தனது காலிறுதியில் 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான ரோனித் சிங்கைத் தோற்கடித்து அரையிறுதியை உறுதி செய்தார். இதேபோல் மற்றொரு இந்திய வீரரான ஸ்ரீராம் பாலாஜி 6-2, 6-0 என்ற நேர் செட்களில் ஜப்பானின் கோ சுஸூகியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

அதேநேரத்தில் தமிழக வீரர் ராம்குமார் அரையிறுதிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 3-6, 3-6 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் அன்டால் வான் டெர் டுயிமிடம் தோல்வி கண்டார். இதனால் 4-வது இந்தியர் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு தகர்ந்தது. ஓர் அரையிறுதியில் விஷ்ணுவும் பாலாஜியும் மோதுகின்றனர். மற்றொரு அரையிறுதியில் சனம் சிங், டுயிமை சந்திக்கிறார்.

இரட்டையர் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி-ரஞ்சித் விராலி முருகேன் ஜோடி, சகநாட்டு ஜோடியான சனம்-விவேக் ஷோகீன் ஜோடியை சந்திக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x