Published : 17 Sep 2013 04:04 PM
Last Updated : 17 Sep 2013 04:04 PM

இந்திய அணியின் 90களின் நிலையில் பாகிஸ்தான் : சலீம் மாலிக்

தற்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 1990-களில் இந்திய அணி இருந்ததைப் போன்று பிளவுபட்டு காணப்படுவதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சலீம் மாலிக் காட்டமாக சாடியுள்ளார்.

மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதற்காக 2000-ம் ஆண்டில் ஆயுள் தடை பெற்ற சலீம் மாலிக், ஊடகங்களைச் சந்திப்பது மிகவும் அரிதானதுதான் என்றாலும், சமீபத்தில் ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் படுதோல்வி கண்டதால் கடும் விரக்தியடைந்துள்ளார்.

இது தொடர்பாக “ஜியோ சூப்பர்” சேனலுக்கு அளித்த பேட்டியில், “1980, 1990-களில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் விளையாடிய இந்திய அணி மிக மோசமாக விளையாடி தோற்றது. அப்போதைய இந்திய அணியில் இருந்த வீரர்களிடையே ஒற்றுமை இல்லாததுதான் அதற்குக் காரணம். அதேபோன்றுதான் இப்போது ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் ஒன்றாக இணைந்து செயல்படாமல் மோசமாக விளையாடி தோற்றனர்.

1980-களில் நடைபெற்ற போட்டிகளில் நாங்கள் (பாகிஸ்தான் அணி), இந்தியாவை தோற்கடித்தபோது இந்திய வீரர்கள் ஒன்றாக இணைந்து விளையாடவில்லை. அவர்கள் அனைவரும் 30 முதல் 40 ரன்கள் அடித்து அடுத்தப் போட்டிக்கான அணியில் இடம்பெறுவதிலேயே குறியாகச் செயல்பட்டதை நாங்கள் உணர்ந்தோம். அதனால்தான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி தடுமாறியது.

இந்திய அணி அப்போது சந்தித்த மோசமான சூழலை துரதிருஷ்டவசமாக பாகிஸ்தான் கிரிக்கெட் இப்போது சந்தித்துள்ளது. இப்போதைய பாகிஸ்தான் வீரர்களில் பெரும்பாலானோர் கொஞ்சம் ரன்களைக் குவித்துவிட்டு, அடுத்தப் போட்டிக்கான அணியில் தங்களின் இடத்தை உறுதி செய்துகொள்வதைக் காணமுடிகிறது.

கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு. அதில் 11 வீரர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றியை ருசிக்க முடியும். ஆனால் பாகிஸ்தான் அணியில் அது நடக்கவில்லை. தற்போதைய பாகிஸ்தான் வீரர்களிடம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணமோ, முனைப்போ இல்லை. அவர்கள் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல், தற்காப்பு ஆட்டத்தைக் கையாள்கின்றனர்.

இந்திய வீரர்கள் ஒன்றிணைந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அணி பேட் செய்யும்போது விரைவாக விக்கெட்டுகளை இழந்தால், மற்ற வீரர்கள் சிறப்பான பங்களிப்பை கொடுத்து அணியைச் சரிவிலிருந்து மீட்க ஆர்வமாக இருக்கிறார்கள். நான் பாகிஸ்தான் வீரர்களை குறைசொல்லவில்லை. அவர்கள் தங்களுடைய அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். கேப்டன் மிஸ்பா உல் ஹக் மட்டுமின்றி அனைத்து வீரர்களும் தங்களின் ஆட்டத்திறன் குறித்து மீண்டும் சிந்திப்பது அவசியம்.

பாகிஸ்தான் அணி தற்போதைய பிரச்சினையில் இருந்து மீண்டு வருவதற்கு கடுமையாக உழைப்பது அவசியம். இல்லாவிட்டால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் மோசமான தோல்வியைச் சந்திக்க வேண்டியிருக்கும்” என்றார் சலீம் மாலிக்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x