Published : 08 Feb 2017 10:52 AM
Last Updated : 08 Feb 2017 10:52 AM
சிறந்த பந்து வீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பதில் இந்தியாவின் அஸ்வினுக்கும், ரவீந்திர ஜடேஜாவுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பந்து வீச்சாளர்களுக்கான தர வரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பதில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும், ஜடேஜாவுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. சமீபத்திய நிலையில் இந்த பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் 887 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். 2016-ம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு அவர் இந்த இடத்தில் நிலையாக இருக்கிறார்.
ஆனால் அவருக்கு சற்றும் குறையாமல் அடுத்தடுத்து வேகமாக விக்கெட்களை வீழ்த்தி வரும் ரவீந்திர ஜடேஜா, தற்போது அந்த பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறார். 879 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் ஜடேஜா, அஸ்வினை விட வெறும் 8 புள்ளிகள் மட்டுமே பின்தங்கி இருக்கிறார். எனவே வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சற்று அசந்தாலும், அதிக விக்கெட்களைக் கைப்பற்றி ஜடேஜா முதலிடத்துக்கு முன்னேறக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளர்கள் இடையே முதலிடத்தைப் பிடிப்பதில் ஏற்பட்டுள்ள இந்த ஆரோக்கியமான போட்டி வங்கதேசத்துக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் எதிரான தொடர்களில் இந்தியாவுக்கு பெரிதும் உதவும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் நம்புகின்றனர்.
பேட்டிங் தரவரிசையைப் பொறுத்தவரை இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி, 875 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார். இப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 933 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறர். வரவிருக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் முதல் இடத்துக்காக கோலிக் கும், ஸ்மித்துக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 120 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், வங்கதேச அணி 62 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT