Published : 14 Jul 2015 04:52 PM
Last Updated : 14 Jul 2015 04:52 PM

கேதர் ஜாதவ் விளாசல் சதம்; மணிஷ் பாண்டே அசத்தல்: இந்தியா 276 ரன்கள்

ஹராரேயில் நடைபெறும் 3-வது, கடைசி ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய பேட்ஸ்மென் கேதர் ஜாதவ் அபார சதம் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ, இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்துள்ளது.

கேதர் ஜாதவ் அதிரடியாக விளையாடி 87 பந்துகளில் 12 பவுண்டரி 1 சிக்சருடன் 105 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். பின்னி 8 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 18 ரன்கள் எடுத்து இன்னொரு முனையில் நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இருவரும் இணைந்து 19 பந்துகளில் அரைசதக் கூட்டணி கண்டனர்.

82/4 என்று இந்திய அணி ரன் எடுக்க கடுமையாக சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ் இணைந்தனர். 5-வது விக்கெட்டுக்காக 25 ஓவர்கள் நின்று 144 ரன்களைச் சேர்த்தனர்.

மணிஷ் பாண்டே 86 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து அறிமுகப் போட்டியிலேயே, நெருக்கடியில் அரைசதம் கண்டார். ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இந்திய அறிமுக வீரர் எடுக்கும் 2-வது அதிகபட்ச அறிமுகப் போட்டி ஸ்கோராகும் இது. 35 ஓவர்களில் இந்தியா 138 ரன்களையே எடுத்திருந்தது கடைசி 15 ஓவர்களில் 138 ரன்கள் விளாசப்பட்டது. 64 பந்துகளில் 50 ரன்கள் கண்ட கேதர் ஜாதவ், அடுத்த 22 பந்துகளில் மேலும் 50 ரன்களைச் சேர்த்து சதம் கண்டார். டிவெண்டி 20 பாணியில் தனது 2-வது அரைசதத்தை எடுத்து அபாரமான சதம் கண்டார். இரண்டாவது அரைசதத்தை எடுக்க 7 பவுண்டரிகள் 1 சிக்சரை விளாசினார் கேதர் ஜாதவ்.

கடைசி 10 ஓவர்களில் 106 ரன்கள் குவிக்கப்பட்டது. கேதர் ஜாதவுக்கு ஓரிரு வாய்ப்புகள் நழுவ விடப்பட்டதன் பலனை ஜிம்பாப்வே அனுபவித்துள்ளனர்.

தொடக்கத்தில் முரளி விஜய் (13), ரஹானே (15) ஆகியோர் ஷாட்களை ஆட முயற்சி செய்தனர். ஆனால் இருவரும் நீடிக்கவில்லை, ரஹானேயின் மிஸ் ஹிட் கவரில் கேட்ச் ஆனது, முரளிவிஜய் டிரைவ் ஆடச் சென்று எட்ஜ் செய்து கேட்ச் கொடுத்தார்.

பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமானது அல்ல. பந்துகள் நின்று வந்தன, இதில் ஜிம்பாப்வே வேகப்பந்த் நன்றாகவே அமைந்தது. மனோஜ் திவாரி திணறினார். 33 பந்துகளில் 10 ரன்களையே அவர் எடுக்க முடிந்தது. உத்சேயாவின் 2-வது பந்தில் முன்விளிம்பு எடுக்க அவுட் ஆனார். அவருக்கு இந்தத் தொடர் பெருத்த ஏமாற்றமே. இனி அவர் அணியில் நுழைய கடுமையாக பாடுபடவேண்டும்.

ராபின் உத்தப்பா 44 பந்துகளில் 31 ரன்களுக்கு நன்றாகவே ஆடினார். சிபாபாவை ஒரு பந்தை இறங்கி வந்து மிட் ஆஃபுக்கு மேல் அடித்த பவுண்டரி கண்ணுக்கு விருந்து. ஆனால் நின்றிருக்க வேண்டும். ஆனால் அவரோ தனது லெக் திசை ஷாட்டினால் மீண்டும் ஒரு லீடிங் எட்ஜுக்கு மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் அப்போதுதான் 22வது ஓவரில் இந்தியா 82/4 என்று தடுமாறியது.

மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ் சதக்கூட்டணி:

தொடக்கத்தில் இவர்களுக்கு பவுண்டரி பந்துகள் கிடைக்கவில்லை, மாறாக மசாகாட்சா அற்புதமாக வீசி, சில பந்துகளில் இவர்களை பீட் செய்தார். ஆனால் பாண்டே அறிமுக வீரருக்கான பதட்டம் இல்லாமல் முதிர்ச்சியுடன் இந்தக் கட்டத்தை எதிர்கொண்டார். தாறுமாறான ஷாட்களை ஆடி அபத்தமாக அழுத்தத்தை குறைக்க அவர் விரும்பவில்லை. முதல் ஷாட்டே 31-வது பந்தில் அவர் மசாகாட்சாவை நேர் சிக்ஸ் அடித்ததுதான். கேதர் ஜாதவ் நல்ல கற்பனைத் திறனுடன் ஆடினார்.

திடீர் ஸ்ட்ரோக்குகளை பயன்படுத்தினார். 34-வது ஓவர் சுழற்பந்து வீச்சாளர் கிரீமர் வந்ததும் கொஞ்சம் ரன்கள் வரத் தொடங்கியது, 41 ரன்களில் கேதர் ஜாதவ் இருந்த போது கிரீமர் கூக்ளி ஒன்று எழும்ப பாயிண்டில் எளிதான கேட்ச் வாய்ப்பை விட்டார் சிகும்பரா. அதன் பிறகுதான் கேதர் ஜாதவ் புகுந்தார் 64 பந்துகளில் அரைசதம் கண்ட அவர் அடுத்த 23 பந்துகளில் மேலும் 55 ரன்களை விளாசினார். திரிபானோவை 3 பவுண்டரிகள் விளாசி 90களூக்கு வந்தார். பின்னி இடையில் புகுந்தார். 50-வது ஓவர் முடிவதற்கு முன்னதாக 49.5வது ஓவரில் கேதர் ஜாதவ் சதம் கண்டார்.

ஜிம்பாப்வே அணியில் மசாகாட்சா அருமையாக வீசி 10 ஓவர்களில் 31 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். உத்சேயாவும் சிக்கனம் காட்டினார்.

277 ரன்கள் இலக்கை எதிர்த்து ஜிம்பாப்வே களமிறங்கவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x