Published : 28 Aug 2016 11:31 AM
Last Updated : 28 Aug 2016 11:31 AM
இந்திய ரயில்வே அணிகளுக்கு இடையேயான தடகளப் போட்டியில் மேற்கு, மத்திய ரயில்வே அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன. இப்போட்டியில் 4 பேர் புதிய சாதனைகளை படைத்தனர்.
இந்திய ரயில்வே அணிகளுக்கு இடையேயான 82-வது தடகள விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் கடந்த 25-ம் தேதி தொடங்கி, நேற்றுவரை நடைபெற்றன. இதில் 25 அணிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஒட்டுமொத்த போட்டிகளின் அடிப்படையில் சிறந்த அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் தெற்கு ரயில்வே அணி முதலிடம் பிடித்தது. ஆண்கள் பிரிவில் சிறந்த தடகள வீரராக ஜஸ்தீப் சிங், பெண்கள் பிரிவில் சிறந்த தடகள வீராங்கனையாக, ஒலிம்பியன் தூத்தி சந்த் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆண்கள் பிரிவில் குழு சாம்பியன் பட்டத்தை மேற்கு ரயில்வே அணி வென்றது. தெற்கு ரயில்வே அணி 2-வது இடம் பிடித்தது. பெண்கள் பிரிவில் குழு சாம்பியன் பட்டத்தை மத்திய ரயில்வே அணி வென்றது. மேற்கு ரயில்வே அணி 2-வது இடம் பெற்றது.
தடகளம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மேற்கு ரயில்வே அணி வென்றது. மத்திய ரயில்வே அணி இரண்டாமிடம் பிடித்தது. அதேபோல, மைனர் யூனிட் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஐசிஎப் அணியும், 2-வது இடத்தை டிஎல்டபிள்யூ அணியும் வென்றன.
இப்போட்டிகளில், தெற்கு ரயில்வே அணி வீராங்கனை எல்.சூர்யா 10 ஆயிரம் மீட்டர் தூரத்தை 33.55.18 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். அதேபோல, டிஎம்டபிள்யூ அணி வீராங்கனை அன்னு ராணி 58.86 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்தும், வடக்கு ரயில்வே அணி வீரர் அர்ஜூன் 59.14 மீட்டர் தூரத்துக்கு வட்டு எறிந்தும் புதிய சாதனைகளைப் படைத்துள்ளனர். இதுதவிர மேற்கு ரயில்வே அணி வீராங்கனை வி.நீனா நீளம் தாண்டுதலில் 6.38 மீட்டர் தாண்டி புதிய சாதனையை படைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT