Published : 01 Mar 2014 11:01 AM
Last Updated : 01 Mar 2014 11:01 AM

தேர்தல் தேதி வெளியான பிறகே ஐபிஎல் நடைபெறும் இடம் குறித்து முடிவு: பிசிசிஐ தலைவர் என். சீனிவாசன்

மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பிறகே ஐபிஎல் போட்டி நடைபெறும் இடம் குறித்து முடிவெடுக்கப்படும் என பிசிசிஐ தலைவர் சீனிவாசன் தெரிவித்தார்.

7-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் 9 முதல் ஜூன் 3 வரை நடைபெறவுள்ளது. அதேநேரத்தில் மக்களவைத் தேர்தலும் வருவதால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது என மத்திய அரசு தெளிவாகக் கூறிவிட்டது.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டியை நடத்துவது குறித்து விவாதிப்பதற்காக பிசிசிஐ செயற்குழு கூட்டம் ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் வெள்ளிக்கிழமை கூடியது. கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிசிசிஐ தலைவர் சீனிவாசன், “மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பிறகே ஐபிஎல் போட்டி நடைபெறும் இடம் குறித்து முடிவு செய்யப்படும். தேவைப்படும்பட்சத்தில் சில போட்டிகள் வெளிநாடுகளில் நடத்தப்படும்.

தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் ஐபிஎல் போட்டியை நடத்துவதில் ஆர்வம் காட்டி வருவதாக ஐபிஎல் தலைவர் ரஞ்ஜிப் பிஸ்வால் எங்களிடம் தெரிவித்தார்” என்றார். ஐபிஎல் முறைகேடு தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்த சீனிவாசன், “பிக்ஸிங்கை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பிசிசிஐ எடுக்கும்” என்றார்.

தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூஸிலாந்துக்கு எதிரான தோல்வியின் காரணமாக இந்திய அணியின் பயிற்சி அதிகாரிகள் மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருப்பது குறித்து சீனிவாசனிடம் கேட்டபோது, “இதுபோன்ற தகவல்கள் ஊடகங்களில் எப்படி வெளியாகின்றன என்பது தெரியவில்லை. சொல்லப்போனால் அதுபற்றி நாங்கள் விவாதிக்கக்கூட இல்லை” என்றார்.

2-வது ஐபிஎல் போட்டியை நடத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியை நடத்தும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதேபோல் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்துவது குறித்தும் பிசிசிஐ பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் ஸ்பான்ஸர்களின் நெருக்கடி காரணமாக பெரும்பாலான போட்டிகளை இந்தியாவில் நடத்துவதில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

ஐபிஎல் போட்டியை நடத்த தென் ஆப்பிரிக்காவில் நல்ல வசதிகள் உள்ளன. இந்திய-தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியங்கள் இடையே சுமூக உறவு இல்லாவிட்டாலும் அங்கு போட்டி நடைபெறும்போது தொலைக்காட்சியில் பார்த்து ரசிப்பதற்கு வசதியாக இருக்கும்.

துபையில் இரண்டுக்கும் மேற்பட்ட மைதானங்கள் இருக்கின்றன. தென் ஆப்பிரிக்காவோடு ஒப்பிடுகையில் பயண நேரமும் குறைவுதான். ஆனால் அந்தநாடு சூதாட்டக் கும்பல்களின் கூடாரமாகத் திகழ்வதுதான் பிரச்சினை. 2000-ல்

மேட்ச் பிக்ஸிங் விவகாரம் வெளியான பிறகு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வதை இந்தியா நிறுத்திக் கொண்டது. மேலும் அதுபோன்ற நாடுகளில் போட்டி நடைபெறும்போது 8 அணிகளின் வீரர்களையும் ஒரே நேரத்தில் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் கண்காணிப்பது கடினமானதாகும்.

போட்டியை நடத்தும் நாடுகளின் வரிசையில் வங்கதேசம் இடம்பெற்றிருந்தாலும், அங்கு பெரிய அளவில் 5 மற்றும் 7 நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோட்டல்கள் குறைவாகும். மேலும் வங்கதேச பிரீமியர் லீக்கில் மேட்ச் பிக்ஸிங் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது. எனவே ஐபிஎல் போட்டியை நடத்த தென் ஆப்பிரிக்காவுக்கே அதிக வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x