Published : 16 Sep 2016 09:48 AM
Last Updated : 16 Sep 2016 09:48 AM
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா - ஸ்பெயின் அணிகளுக்கிடையேயான ஆட்டம் டெல்லியில் இன்று தொடங்குகிறது.
டேவிஸ் கோப்பை டென்னிஸில் எலைட் உலகக் குழு பிரிவில் டெல்லியில் இன்று நடக்கும் போட்டியில் பலம்வாய்ந்த ஸ்பெயின் அணியை எதிர்த்து இந்திய அணி மோதுகிறது. டேவிஸ் கோப்பை தரவரிசைப்படி இந்திய அணி 20-வது இடத்திலும், ஸ்பெயின் அணி 14-வது இடத்திலும் உள்ளது. மேலும் ஸ்பெயின் அணியில் உலகின் 4-ம் நிலை வீரரான ரபேல் நடால், டேவிட் பெரர் போன்ற வலுவான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணியில் லியாண்டர் பயஸ் மட்டுமே அனுபவமிக்க வீரராக உள்ளார். அதனால் 5 போட்டிகளைக் கொண்ட இந்த டேவிஸ் கோப்பை தொடரில் வெற்றிபெற இந்திய அணி கடுமையாக போராட வேண்டியிருக்கும்.
இந்திய அணியில் சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஆகியோர் ஒற்றையர் பிரிவில் ஆடுகிறார்கள். ரபேல் நடால், டேவிட் பெரர் ஆகியோருக்கு எதிரான போட்டியில் ஆடுவது அவர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இப்போட்டியைக் குறித்து இந்திய வீரர் லியாண்டர் பயஸ் கூறும்போது, “இழப்பதற்கு ஏதுமில்லை என்ற மனநிலையில் ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டியை எதிர்கொள்கிறோம். இந்திய அணி இப்போட்டித்தொடரில் கடுமையாக போராடும்” என்றார்.
இன்று நடக்கும் முதல் ஒற்றையர் போட்டியில் நடாலை எதிர்த்து ராம்குமார் ராமநாதன் மோதுகிறார். மற்றொரு போட்டியில் டேவிட் பெரரை எதிர்த்து சாகேத் மைனேனி ஆடுகிறார்.
இந்தியாவும் ஸ்பெயினும் இதுவரை டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் 3 முறை மோதியுள்ளன. இதில் ஸ்பெயின் அணி 2 முறையும் இந்தியா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT