Last Updated : 05 Aug, 2016 09:34 AM

 

Published : 05 Aug 2016 09:34 AM
Last Updated : 05 Aug 2016 09:34 AM

11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு: ரியோ ஒலிம்பிக் திருவிழா நாளை தொடக்கம்

பீலே தீபம் ஏற்றுகிறார்; இந்திய கொடியை ஏந்தி செல்கிறார் அபிநவ் பிந்த்ரா



*

பிரேசிலின் இரண்டாவது மிகப் பெரிய நகரான ரியோ டி ஜெனிரோ வில் 31-வது ஒலிம்பிக் திருவிழா நாளை அதிகாலை இந்திய நேரப் படி 4.30 மணிக்கு கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்குகிறது. தொடக்க விழா நிகழ்ச்சிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

தென் அமெரிக்க மண்ணில் ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுவது இதுதான் முதன்முறை. மேலும் போர்த்துக்சீய மொழி பேசும் நாட்டில் ஒலிம்பிக் திருவிழா நடத்தப் படுவதும் இதுதான் முதன்முறை.

17 நாட்கள் திருவிழா

உலகின் மாபெரும் விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்கை நடத்தும் வாய்ப்பைக் கடும் போட்டிக்கு இடையேதான் பிரேசில் பெற்றிருந்தது. மேலும் அதிபர் தில்மா ரூசெஃப் மீதான வழக்கு விசாரணை, உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடிநிலை, ஜிகா வைரஸ் அச்சுறுத்தல், ஊக்க மருந்து விவகாரத்தால் ரஷ்ய தடகள அணிக்கு தடை, குவானாபாரா கடல் பகுதி மாசு எனப் பல்வேறு பிரச்சினைகளை கடந்துதான் ஒலிம்பிக் போட்டிகளை பிரேசில் நடத்துகிறது.

வரும் 21-ம் தேதி வரை மொத் தம் 17 நாட்கள் நடைபெறும் ரியோ ஒலிம்பிக் திருவிழாவில் அமெ ரிக்கா, சீனா, இந்தியா உட்பட 206 நாடுகளைச் சேர்ந்த 11,239 வீரர் வீராங்கனைகள் கலந்துகொள் கின்றனர். இந்த முறை கோசாவோ, தெற்கு சூடான் அணிகள் முதன் முறையாக ஒலிம்பிக்கில் காலடி எடுத்து வைக்கின்றன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங் கனைகள் ஒலிம்பிக் கிராமத்தில் குவிந்துள்ளதால் ரியோ நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

ரூ.76 ஆயிரம் கோடி

மொத்தம் 31 விளையாட்டுகளில் 41 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. ரக்பி செவன்ஸ், கோல்ப் ஆகிய விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 306 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது. சாவோ பாவ்லோ, பெல்லோ ஹாரிசோன்டி, சல்வேடார், பிரேசில்லா, மனாஸ் ஆகிய 5 நகரங்களில் உள்ள 33 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த ஒலிம்பிக் போட்டியை சுமார் 76 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரேசில் நடத்துகிறது.

தொடக்க விழா நிகழ்ச்சிகள் வரலாற்று சிறப்பு வாய்ந்த மரக்கானா மைதானத்தில் நாளை அதிகாலை 4.30 தொடங்குகிறது. தொடக்க விழா நிகழ்ச்சிகளில் வரவேற்புரை, கொடியேற்றம், விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு, ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல், வீரர்கள், நடுவர்கள், அலுவலர் உறுதிமொழிகள் ஆகி யவை இடம்பெறும். இவற்றுடன் பிரேசில் நாட்டின் பண்பாட்டை பிரதி பலிக்கும் வகையில் கலைநிகழ்ச்சி கள் இடம் பெறுகின்றன.

தீபம் ஏற்றும் பீலே

தொடக்க விழா நிகழ்ச்சிகள் சுமார் 4 மணி நேரம் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. ஒலிம்பிக் தீபத்தை பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே ஏற்றுகிறார். இதற்காக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் விடுத்துள்ள அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். பீலேவுடன் இங்கிலாந்து நடிகை ஜூடி டென்ச் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார். அவர் ஒலிம்பிக் போட்டிக்கான பாடலை பாடுகிறார்.

தொடக்க விழாவில் சுமார் 6 ஆயிரம் நடன கலைஞர்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. தொடக்க விழாவுக்கு பிரேசில் நாட்டை சேர்ந்த இயக்குநர் பெர்னாண்டோ மெய்ரெல்ஸ் மற்றும் தயாரிப்பாளர் டேனிலா தாமஸ் ஆகியோர்தான் பொறுப்பாளர்களாக உள்ளனர். நடன அமைப்பாளர் டிபோராக் கோல்கரின் கைவண்ணத்தில் கலக்கல் நடனமும் இடம் பெறுகிறது. தொடக்க விழா நடைபெறும் மைதானத்தில் 75 ஆயிரம் பேர் அமரும் வசதி உள்ளது.

குறைந்த செலவில்

2012 லண்டன் ஒலிம்பிக்கில் தொடக்க விழாவுக்காக மட்டுமே பல ஆயிரம் கோடி ரூபாய் செலவி டப்பட்டது. ஆனால் ரியோ ஒலிம் பிக்கில் லண்டன் போட்டிக்கு செலவி டப்பட்ட தொகையில் 10 சதவீதம் மட்டுமே தொடக்க விழாவுக்கு செலவழிக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக மெய்ரெல்ஸ் கூறும்போது, “லண்டன் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவுக்கு செலவு செய்தது போல் அதிக அளவிலான பணத்தை நாங்கள் செலவு செய்ய விரும்பவில்லை. அந்த பணத்தை துப்புரவு, கல்விக்காக செலவிட லாம். அர்த்தமுள்ளதாக உள்ள குறைந்த செலவில் நிகழ்ச்சிகளை நடத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

அணிவகுப்பு

தொடக்க விழா நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக வீரர்களின் அணி வகுப்பு இடம் பெறுகிறது. ஒலிம்பிக் பிறந்த இடமாக கருதப்படும் கீரிஸ் அணி முதலில் அணி வகுத்து செல்ல அகர வரிசைப்படி மற்ற நாட்டு அணிகள் வரிசையாக செல்லும். கடைசியாக போட்டியை நடத்தும் பிரேசில் நாட்டு அணியை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் செல்வார்கள்.

ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா வில் இருந்து 118 வீரர், வீராங்கனை கள் கலந்து கொள்கின்றனர். இந்திய வரலாற்றில் ஒலிம்பிக்கில் அதிகள அளவிலான வீரர்கள் பங்கேற்பது இதுவே முதன்முறையாகும். அணிவகுப்பில் துப்பாக்கி சுடுதல் வீரர் அபிநவ் பிந்த்ரா தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்.

உசேன் போல்ட்

ஜமைக்காக தடகள வீரர் உசேன் போல்ட் 3-வது முறையாக 3 தங்க பதங்கங்களை வேட்டையாட தயாராக உள்ளார். ஒலிம்பிக்கின் தங்க மகனான அமெரிக்காவின் மைக்கல் பெல்ப்ஸ் ‘தங்க வேட்டை தாகத்துடன்' நீச்சல் குளத்தில் பாய்ந்து செல்ல முழு அளவில் ஆயத்தமாக இருக்கிறார்.

31 வயதான பெல்ப்ஸ் இது வரை ஒலிம்பிக் போட்டியில் 18 தங்கப் பதக்கம் உட்பட 22 பதக்கங்கள் வென்றுள்ளது குறிப் பிடத்தக்கது. அமெரிக்க ஜிம்னாஸ் டிக் வீராங்கனை சைமோன் பில்ஸ், பிரேசில் கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மர், சிரியாவின் யசுரா மர்தினி, மபிகா உள்ளிட்ட பலர் முதல்முறையாக தங்கப் பதக்கத்தை கைப்பற்றும் முனைப்பில் உள்ளனர்.

பலத்த பாதுகாப்பு

ஒலிம்பிக் போட்டி பாதுகாப்புக் காக 85 ஆயிரம் ராணுவ வீரர்கள், போலீஸார் பணியில் ஈடுபடுத்தப் பட உள்ளனர். இது கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை விட இருமடங்கு அதிகமாகும்.

ஐந்து வளையங்கள்

ஒலிம்பிக் சின்னமான ஐந்து வளையங்கள், பூமியில் உள்ள ஐந்து கண்டங்களைக் குறிப்பதாக நவீன கால வரையறை சொல்கிறது. ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா, இரண்டு அமெரிக்கக் கண்டங்கள், ஆஸ்திரேலியா ஆகியவையே அந்த ஐந்து கண்டங்கள். இருந்தபோதும் 1912 ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக் போட்டிகளில் ஐந்து வளையங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில், அப்போது பங்கேற்ற நாடுகளின் கொடியில் இருந்த ஐந்து வண்ணங்கள் எடுக்கப்பட்டே இந்தச் சின்னம் உருவாக்கப்பட்டது.

குறிக்கோள்

ஒலிம்பிக்கின் குறிக்கோள், ‘இன்னும் வேகம், இன்னும் உயரம், இன்னும் வலிமை.’

இந்த வாசகத்தை முன்வைத்தவர் பியர் தெ குபர்தெனின் நண்பர் பாதிரியார் ஹென்றி டிடான். 1894-ல் இந்தக் குறிக்கோள் முன்மொழியப் பட்டது.

கொடி

ஒலிம்பிக் கொடி என்பது வெள்ளை பின்னணியில் ஒன்றோடு மற்றொன்று பிணைந்த நீலம், மஞ்சள், கறுப்பு, பச்சை, சிவப்பு வளையங்களைக் கொண்டது. உலக விளையாட்டு வீரர் வீராங்கனைகள் ஓரிடத்தில் கூடுவதையும் மனிதர்கள் வாழும் ஐந்து கண்டங்களின் ஒருங்கிணைவையும் எடுத்துக்கூறும் ஒலிம்பிக்கின் சர்வதேசத் தத்துவத்தை இது வெளிப்படுத்துகிறது. 1920 ஆண்ட்வெர்ப் ஒலிம்பிக் போட்டிகளில் தான் ஒலிம்பிக் கொடி முதன்முதலில் பறக்க விடப்பட்டது.

தீபம்

ஒலிம்பிக் சின்னங்களில் ஒன்றாக ஒலிம்பிக் சுடர் கருதப்படுகிறது. இதற்கான தீப ஓட்டம் 1936 பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளின்போது தொடங்கியது. ஒலிம்பிக் தீபம், பண்டைய ஒலிம்பியாவில் புறப்பட்டு உலகம் முழுவதும் வலம்வந்து கடைசியாகப் போட்டி நடைபெறும் நாட்டை அடைகிறது. ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கத்தை அறிவிக்கும் முதல் அம்சம், ஒலிம்பிக் தீப ஓட்டம். இந்தத் தீபம் ஏற்றப்பட்டது முதல் போட்டிகள் முடியும்வரை எங்கும் தடைபடாமல், அணைக்கப்படாமல் வைக்கப்படுகிறது.

நல்லெண்ணச் சின்னம்

போட்டியை நடத்தும் நாட்டின் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையிலும் விளையாட்டின் சாராம்சத்தைப் பிரபலப்படுத்தும் வகையிலும் நல்லெண்ணச் சின்னம் உருவாக்கப்படுகின்றன. ரியோ ஒலிம்பிக்கின் நல்லெண்ணச் சின்னமாக ‘விம்சியஸ்’ அறிவிக்கப் பட்டுள்ளது. இது பிரேசில் நாட்டில் வாழும் விலங்கினங்களின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x