Published : 27 Feb 2016 08:45 PM
Last Updated : 27 Feb 2016 08:45 PM

இந்திய பந்து வீச்சு அபாரம்: 83 ரன்களுக்குச் சுருண்டது பாகிஸ்தான்

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் தோனியினால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 17.3 ஓவர்களில் 83 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் அவசரகதியில் இழந்தது.

இந்தியப் பந்து வீச்சும் பீல்டிங்கும் கைகொடுக்க, பாகிஸ்தானின் எந்த வித இலக்குமற்ற பேட்டிங்கும், தேவையில்லாத ரன் அவுட்களும் ஒன்று சேர அந்த அணி அவசர கதியில் விக்கெடுகளை இழந்து இந்திய அணியிடம் குறைந்த ரன்களில் 83-க்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.

பிட்ச் தோனி கணித்தது போல் வன்மையாகவும், ஓரளவுக்கு புற்களும் இருந்ததால் வேகப்பந்துக்கு சாதகமாக இருந்தது. இது நெஹ்ரா, மொகமது ஹபீஸை வீழ்த்திய பந்திலும், பும்ராவின் ஒட்டுமொத்த பந்து வீச்சிலும் தெரிந்தது, குறிப்பாக பும்ரா வீசிய 2-வது ஓவரில் பாகிஸ்தான் பேட்ஸ்மென் குர்ரம் மன்சூருக்கு என்ன ஆனது என்றே புரியவில்லை. முதல் பந்தே மிகப்பெரிய இன்ஸ்விங்கர், எல்.பி முறையீடு எழுந்தது. ஆனால் பந்து மேலே செல்லும் என்று நடுவர் கணித்தார். ஆனால் அடுத்த பந்து அதே லெந்தில் உள்ளே வந்து பிறகு லெக் கட் ஆகி எழும்பிச் சென்றது குர்ரம் மன்சூர் கால்கள் ஆடத் தொடங்கின. அந்த ஓவர் என்ன நடந்தது என்று தெரிவதற்கு முன்பாகவே மெய்டன் ஓவர் ஆனது.

ஷர்ஜீல் கானை 7 ரன்களில் பும்ரா வீழ்த்தினார். 6-வது ஓவரில் ஷோயப் மாலிக் கவரில் பந்தை தட்டி விட்டு 2 தப்படி எடுத்து வைத்து பின் வாங்க குர்ரம் மன்சூர் தபதபவென ரன்னர் முனையிலிருந்து ஓட கோலி பந்தை எடுத்து நேராக ஸ்டம்பை பெயர்த்தார். குர்ரம் மன்சூரின் வேதனை 10 ரன்களில் முடிவுக்கு வந்தது.

பவர் பிளே முடிவில் பாகிஸ்தான் 32/3. 7-வது ஓவரில், ஷோயப் மாலிக் 4 ரன்கள் எடுத்து பாண்டியாவின் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை டிரைவ் ஆட முயன்று எட்ஜ் ஆக தோனி கேட்ச் பிடிக்க ஆட்டமிழந்தார்.

8-வது ஓவரில் அஸ்வின் வந்து முடித்து வைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் யுவராஜ் சிங் பந்து வீச அழைக்கப்பட்டார். ஆனால் யுவராஜ் ஏமாற்றவில்லை. ரவுண்ட் த விக்கெட்டில் அவர் வீசிய பந்தை தவறான லைனில் ஆடிய அபாய வீரர் உமர் அக்மல் நேராக கால்காப்பில் வாங்கி 3 ரன்களில் எல்.பி.ஆனார்.

அப்ரீடி களமிறங்கி அதே ஓவரில் மீண்டும் ஒரு தவறான புரிதலில் ரன் அவுட் ஆனார். யுவராஜ் சிங்கை ஸ்கொயர் லெக் திசையில் தட்டி விட்டு 2-வது ரன்னை எடுக்க முயன்றார். பந்தை எடுத்தது இந்திய அணியின் சிறந்த பீல்டர் ஜடேஜா பந்தை எடுத்து தோனிக்கு அனுப்ப தோனி விரைவாகச் செயல்பட்டார். டைவ் அடித்தும் அப்ரீடி தோல்வியடைந்தார்.

வஹாப் ரியாஸ் 4 ரன்களில் ஜடேஜாவை ஸ்வீப் செய்ய முயன்று எல்.பி.ஆனார். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்த சர்பராஸ் அகமது ஜடேஜா பந்தை லெக் திசையில் ஒதுங்கிக் கொண்டு ஆட நினைத்தார், இதனை முதலிலேயே அறிந்த ஜடேஜா வேகமாக ஸ்டம்புக்குள் ஒரு பந்தை வீச அடிக்க போதுமான இடமின்றி பவுல்டு ஆனார் சர்பராஸ்.

கடைசியில் பாண்டியா மொகமது சமியையும், மொகமது ஆமிரையும் அடுத்தடுத்த பந்துகளில் காலி செய்து 8 ரன்களுக்கு அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜடேஜா 3 ஓவர்களில் 11 ரன்கள் 2 விக்கெட், ஒரு அற்புதமான ரன் அவுட். அதுவும் அப்ரீடியை வீழ்த்திய த்ரோ. அஸ்வின் இந்தப் போட்டியில் அமைதி காத்தார்.

பிட்ச் பேட் செய்வதற்கு எளிதானதல்ல, இந்திய பேட்டிங் வரிசை கொஞ்சம் டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டி பாணியில் நிதானத்துடன் ஆடினாலே வெல்லலாம். அல்லது மெக்கல்லம் பாணியில் வந்தால் வரட்டும் வராவிட்டால் போகட்டும் என்று ஒரு அதிரடித் தொடக்கத்தைக் காண வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x