Last Updated : 01 Oct, 2014 10:43 AM

 

Published : 01 Oct 2014 10:43 AM
Last Updated : 01 Oct 2014 10:43 AM

யோகேஷ்வரின் அரையிறுதியே நான் பார்த்ததில் சிறந்த போட்டி: சுஷீல் குமார்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் அரையிறுதியில் யோகேஷ்வர் தத் வெளிப்படுத்திய ஆட்டம்தான், நான் பார்த்த போட்டிகளிலேயே மிகச்சிறந்த போட்டி என்று இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரரான சுஷீல் குமார் தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் மல்யுத்த பிரிவில் இந்தியாவின் யோகேஷ்வர் தத் தங்கப் பதக்கம் வென்ற நிலையில், அவரைப் பாராட்டியுள்ள சுஷீல் குமார் மேலும் கூறியிருப்பதாவது:

அரையிறுதியில் சீன வீரர் கடாய்க்கு எதிராக யோகேஷ்வர் தத் விளையாடியவிதம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. சரிவிலிருந்து மீண்டு அவர் வெற்றி கண்டார். நான் பார்த்த போட்டிகளில் இதுதான் சிறந்த போட்டி. அவருடைய ஆட்டம் இந்திய மல்யுத்த வீரர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்றார்.

தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர்களின் செயல்பாடு பற்றி உங்களின் மதிப்பீடு என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த சுஷீல் குமார், “கடந்த முறை நாம் 3 பதக்கங்களை வென்றோம். இந்த முறை இதுவரை 5 பதக்கங்களை வென்றிருக்கிறோம். இதனால் என்னைவிட வேறு யாரும் அதிக அளவில் மகிழ்ச்சியடைந்திருக்க முடியாது. வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கும் பஜ்ரங் திறமையான இளம் வீரர். அவர் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். இதேபோல் நர்சிங் வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

அமித் தங்கம் வெல்வார் என எதிர்பார்த்தேன். அது நடக்காததால் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தேன். அதேநேரத்தில் விளையாட்டில் இதுபோன்று நடப்பது சகஜம்தான். இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு அமித் வலுவான வீரராக உருவெடுப்பார். கிரேக்கோ ரோமன் பிரிவில் இந்தியர்கள் மேலும் சில பதக்கங்களை வெல்வார்கள் என நம்புகிறேன்” என்றார்.

எனது எடைப் பிரிவில் இளம் வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை அறிவதற்காகவே ஆசிய விளையாட்டுப் போட்டியிலிருந்து விலகினேன் என தெரிவித்த சுஷீல் குமார், “அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளேன். இதுதவிர அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள முக்கியமான கிராண்ட்ப்ரீ போட்டிகளிலும் பங்கேற்க முடிவு செய்துள்ளேன். அப்படி பங்கேற்கும்போது ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு முழு வீச்சில் தயாராகிவிடுவேன்” என்றார்.

நீச்சல் பிரிவில் பதக்கம் வென்ற சந்தீப் செஜ்வால், ஜிம்னாஸ்டிக்கில் பதக்கம் வென்ற தீபா கர்மாகர் ஆகியோரைப் பாராட்டிய பேசிய சுஷீல் குமார், “நீச்சல் போட்டியில் இந்தியர்கள் பதக்கம் வெல்வது மிகவும் அரிது. ஆனால் சந்தீப் செஜ்வால் இப்போது பதக்கம் வென்றிருக்கிறார். அதற்காக அவரை பாராட்டியாக வேண்டும். இது நீச்சலில் நாம் முன்னேறி கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. இதேபோல் தீபா வுக்கும் வாழ்த்து தெரிவிக்க விரும்பு கிறேன். இவர்கள் இருவரும் ஊக்குவிக்கப்பட்டால் வரும் காலங்களில் பதக்கம் வெல்ல வாய்ப்பிருக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x