Last Updated : 13 Apr, 2017 10:25 AM

 

Published : 13 Apr 2017 10:25 AM
Last Updated : 13 Apr 2017 10:25 AM

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பார்சிலோனா அதிர்ச்சி தோல்வி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முதல் கட்ட கால் இறுதியில் பார்சிலோனா அணி 0-3 என்ற கோல் கணக்கில் ஜூவன்டஸ் அணியிடம் தோல்வியடைந்தது.

இத்தாலியின் டுரின் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முன்கள வீரரான பாவ்லோ டைபலா 7-வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஜூவன் குவாட்ராடோ வலது புறத்தில் கொடுத்த பந்தை பெற்ற டைபலா 12 அடி தூரத்தில் இருந்து இலக்கை நோக்கி துல்லியமாக அடிக்க, கோல்கீப்பர் மார்க் ஆந்த்ரேவின் தடுப்பை மீறி கோல் வலைக்குள் தஞ்சம் அடைந்தது. இதனால் தொடக்கத்திலேயே ஜூவன்டஸ் 1-0 என முன்னிலை பெற்றது.

21-வது நிமிடத்தில் பார்சிலோனா அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. லயோனல் மெஸ்ஸியிடம் இருந்து பாஸை பெற்ற இனியஸ்டா, இலக்கை நோக்கி அடித்த பந்தை ஜூவன்டஸ் கோல்கீப்பர் ஜியான் லுகி பபுன் அற்புதமாக தடுத்தார். அடுத்த நிமிடத்தில் ஜூவன்டஸ் அணி 2-வது கோலை அடித்து பார்சிலோனாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

இந்த கோலையும் டைபலாவே அடித்தார். மரியோவிடம் இருந்து பந்தை பெற்ற டைபலா கோல்கம்பத்துக்கு மிக அருகே வைத்து இந்த கோலை அடித்தார். 30-வது நிமிடத்தில் மெஸ்ஸி அடித்த பந்து கோல்கம்பத்தின் விளிம்பில் பட்டு நழுவி சென்றது. முதல் பாதியில் ஜூவன்டஸ் 2-0 என வலுவான முன்னிலையை பெற்றது.

இரண்டாவது பாதியில் பார்சிலோனா வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. 55-வது நிமிடத்தில் ஜூவன்டஸ் அணி 3-வது கோலை அடித்தது. இந்த கோலை செய்லினி அடித்தார். கடைசி வரை போராடியும் பார்சிலோனா அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனது. முடிவில் ஜூவன்டஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

பார்சிலோனா அணியில் மெஸ்ஸி, நெய்மர், லூயிஸ் சுவாரஸ் போன்ற முன்னணி வீரர்கள் இருந்தும் தோல்வியை தழுவியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. இரு அணிகளும் தங்களது 2-வது கட்ட கால் இறுதியில் வரும் 19-ம் தேதி மோதுகின்றன.

இந்த ஆட்டம் அர்ஜென்டினாவில் உள்ள கேம்ப் நுவ் நகரில் நடைபெறுகிறது. இதில் பார்சிலோனா அணி 4-0 என வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேற முடியும். பார்சிலோனா இம்முறை கால் இறுதிக்குள் கடுமையாக போராடியே நுழைந்திருந்தது.

கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் பாரிஸ் செயின்ட் அணியிடம் முதல் கட்ட ஆட்டத்தில் 0-4 என தோல்வியடைந்த நிலையில் 2-வது கட்ட ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவில் 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அசத்தியிருந்தது பார்சிலோனா. இதேபோன்று மீண்டும் ஒரு மேஜிக் ஆட்டத்தை மேற்கொண்டால் மட்டுமே பார்சிலோனா அணியால் அரை இறுதிக்கு நுழைய முடியும்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x