Published : 04 Mar 2017 06:28 PM
Last Updated : 04 Mar 2017 06:28 PM

வார்னருக்கு ரஹானே நழுவ விட்ட கேட்ச்: ஆஸ்திரேலியா 40/0

பெங்களூரு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை முழு ஆதிக்கம் செலுத்தி 189 ரன்களுக்குச் சுருட்டிய பிறகு விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் நாள் ஆட்ட முடிவில், வார்னர் 23 ரன்களுடனும், ரென்ஷா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 16 ஓவர்கள் இந்திய பவுலர்கள் பல்வேறு விதத்தில் போராடியும் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியவில்லை.

ஆனால் இசாந்த் சர்மா பந்து வீச்சில் டேவிட் வார்னருக்கு ரஹானே கேட்ச் ஒன்றைக் கோட்டை விட்டார். கடந்த போட்டியில் ஸ்மித்துக்கு மட்டும் 7 கேட்களுடன் மொத்தம் 7 கேட்ச்கள் விட்டதோடு, இந்த ரஹானே நழுவ விட்ட கேட்சையும் சேர்த்து இந்த சீசனில் மட்டும் 24 கேட்ச்கள் இந்திய பீல்டர்களால் கோட்டை விடப்பட்டுள்ளன.

இன்று நேதன் லயன் ஓரளவுக்கு பேட்டிங் சாதக ஆட்டக்களத்தில் பந்தின் தையல் லெக்ஸ்லிப் திசை நோக்கி இருக்குமாறான ஒரு பிடிமானத்தில், பழைய ஆஃப் ஸ்பின் பவுலிங் உத்தியை லயன் கடைபிடித்தார், இந்த க்ரிப்பில் சில பந்துகள் திரும்பும் சில பந்துகள் திரும்பாமல் நேராகச் செல்லும், இன்றும் அந்தக் குழப்பம் இந்திய பேட்ஸ்மென்களுக்கு ஏற்பட்டது. ஸ்பின் ஆகாத பந்துகளில் சிலரும் சற்றே ஸ்பின் ஆன பந்துகளில் சிலரும் ஆட்டமிழந்தனர்.

மேலும் லயன் வீசிய லெந்த் என்பது பேட்ஸ்மென்கள் எவ்வளவுதான் காலை நீட்டி மட்டையை நீட்டி ஆடினாலும் ரீச் செய்ய முடியாதது, சரி இதற்காக பின்னால் சென்று ஆட வேண்டும் என்றால் அப்போது பந்துகள் எழும்பித் திரும்பும் வாய்ப்புகள் அதிகம். சிலசமயம் திரும்பாமலும் போகலாம், இதனை சரியாகக் கணிக்கும் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், திராவிட் போன்றவர்களோ அல்லது வருவது வரட்டும் என்று மேலேறி வந்தோ, ஸ்லாக் ஸ்வீப் செய்தோ ஆடும் சேவாக் போன்றவர்களோ இருந்தால்தான் இதனைச் சமாளிக்க முடியும். அதாவது லயனின் லைன் மற்றும் லெந்தை சிதறடிக்கும் பேட்டிங் அணுகுமுறை தேவை.

அவர் சவுகரியமாக அந்த லெந்த்தில் வீச அனுமதிக்கக் கூடாது, இந்த விதத்தில் தற்போதைய இந்திய அணியில் புஜாரா, ரஹானே, ஏன் விராட் கோலியே கூட சவாலுக்கு உரிய பேட்ஸ்மென்களா என்பது சந்தேகமே.

அஸ்வின் முதல் நாள் பிட்சில் சரியாக வீசக்கூடியவரல்ல, இன்று தன் முதல் ஓவரில் திரும்பாத நேராக வீசப்பட்ட இரு பந்துகளில் அடுத்தடுத்து ரென்ஷா மீது இரண்டு உரத்த எல்.பி.முறையீடுகளை மேற்கொண்டார். ஆனால் பலனில்லை, ரிவியூ செய்யாததும் சரியானதே, ஆனால் மற்றபடி அஸ்வின் பந்தில் அபாயகரம் ஒன்றுமில்லாமல் இருந்தது.

அஸ்வின் ரென்ஷாவை படுத்திய அந்த 2 பந்துகளுக்குப் பிறகு அடுத்த ஓவரில் இசாந்த் சர்மா வீச லெந்த் பந்து சற்றே நின்று வர வார்னர் எட்ஜ் செய்தார், கல்லியில் நின்று கொண்டிருந்த ரஹானேவுக்கு இடப்புறத்தில் கேட்சாகச் சென்றது, ரஹானே டைவி அடித்து இருகைகளையும் கொண்டு சென்றார், ஆனால் அது கையில் ஒட்டவில்லை. நழுவியது, வார்னர் அப்போது 9 ரன்களில் இருந்தார்.

இது நடந்தது 7-வது ஓவரில் ஆட்டம் முடிய இன்னமும் 9 ஓவர்கள் இருந்த நிலையில் கேட்சைப் பிடித்திருந்தால் ஒருவேளை மேலும் ஒரு விக்கெட்டையோ 2 விக்கெட்டையோ வீழ்த்த நெருக்கடி கொடுத்திருக்கலாம். இதுதான் பிரச்சினை, கேட்சைக் கோட்டை விட்டால் என்ன விதமாக வீசினாலும் பயனற்றுதான் போகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x