Published : 22 Sep 2016 03:16 PM
Last Updated : 22 Sep 2016 03:16 PM

தோனியின் கேப்டன் பொறுப்பை பறிக்க பலமுறை விவாதித்தோம்: மனம் திறக்கும் சந்தீப் பாட்டீல்

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி திடீரென ஓய்வு அறிவித்ததால் அவரது ஒருநாள் கிரிக்கட் வாழ்வு பற்றியும் கேப்டன்சி பற்றியும் விவாதித்து அவரை கேப்டன்சியிலிருந்து நீக்கவும் சில வேளைகளில் ஆலோசனை நடத்தியுள்ளதாக முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் தெரிவித்தார்.

கடந்த ஆஸ்திரேலியா தொடரின் நடுவில் தோனி திடீரென டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இது பெரிய ‘அதிர்ச்சி’ அலைகளை ஏற்படுத்தியதாகக் கூறிய சந்தீப் பாட்டீல், “உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு அறிவித்ததால் தோனியின் ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பு அச்சுறுத்தலுக்குள்ளானது. இது குறித்து நிறைய விவாதங்கள் நடத்தினோம். ஒரு முறை இருமுறை அல்ல பலமுறை விவாதித்துள்ளோம்” என்று ஏபிபி நியூஸ் சேனலுக்கு தெரிவித்தார் சந்தீப் பாட்டீல்.

“இது மட்டுமல்ல அவரது ஒருநாள் கேப்டன்சி பற்றி விவாதித்ததோடு, அவரது பினிஷிங் பற்றியும் நிறைய முறை விவாதித்துள்ளோம். நாங்கள் தோனியின் கேப்டன்சியையே தொடர காரணம் அப்போது 2015 உலகக்கோப்பை வந்து விட்டது, உலகக்கோப்பைக்கு முன்னதாக புதிய வீரர் கையில் கேப்டன்சியைக் கொடுத்திருந்தால் அவரும் ஒருசில போட்டிகள் விளையாடி அனுபவம் பெற்றிருப்பார். ஆனால் தேர்வாளர்களுக்கு அந்த வாய்ப்பே கிடைக்கவில்லை. புதிய கேப்டனை வைத்து பரிசோதிக்க போதிய நேரமில்லாமல் போனது.

தோனி திடீரென டெஸ்ட் கேப்டன்சியை துறந்ததால் கப்பல் மூழ்கி விட்டது என்று நான் கூற விரும்பவில்லை. ஆனால் ஆஸ்திரேலியா தொடர் எப்பவும் கடினமான ஒன்று. நம் வீரர்கள் அங்கு சிலபல கடினப்பாடுகளை அனுபவித்தனர். விராட் கோலி தவிர மற்றவர்களின் ஆட்டம் அப்போது சரியாக அமையவில்லை.

அந்நேரத்தில் திடீரென ஒரு சீனியர் வீரர், கேப்டன் திடீரென ஓய்வு பெறும் முடிவை எடுப்பது அதிர்ச்சிகரமானது. எங்களுக்குள்ளேயே கூட நிறைய விவாதங்கள் நடந்தன, எப்படி இது நடக்க முடியும் என்று நாங்கள் விவாதித்தபடியேதான் இருந்தோம்.

ஆனால் அது தோனியின் முடிவு, ஒருவரது உடல் தகுதி பற்றி அவர்தான் யோசித்து முடிவெடுக்க முடியும். தேர்வுக்குழுவினர் முடிவெடுக்க முடியாது. தோனி இதனைப் புரிந்து கொண்டு சரியான தருணத்தில் சரியான முடிவை எடுத்தார்.

ஒருநாள் அணித் தேர்வின் போது அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த நேரம் குறித்து நாங்கள் கேள்வி எழுப்பினோம், ஆனால் அவர் இவ்வாறு பதில் அளித்தார், அதாவது, ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் அணிக்கு வேறு ஒருதளத்தில் பங்களிப்பு செய்ய வேண்டும், ஆனால் அது நடக்கவில்லை எனும்போது நான் வெளியேறுவதுதான் சிறந்தது என்று முடிவெடுத்தேன்’ என்றார். கிரிக்கெட்டில் ஒரு சில வீரர்களே இப்படி முடிவெடுக்க முடியும். அனைவரும் இன்னும் கொஞ்சம் ஆட முடியும் என்றே நினைப்பார்கள். இன்னொரு தொடர், இன்னொரு ஆண்டு... இப்படித்தான் யோசிப்பார்கள். ஆனால் தோனி அப்படியல்ல” என்றார் பாட்டீல்.

அதே போல் கம்பீர், யுவராஜ் அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து பாட்டீல் கூறும்போது, “இது முழுதும் தேர்வுக்குழுவினரின் முடிவேயன்றி தோனிக்கு அவ்விஷயத்தில் எந்த வித சம்பந்தமும் இல்லை” என்றார்.

சச்சின் ஓய்வு குறித்து...

நாங்கள் சச்சின் மீது எந்த முடிவையும் திணிக்கவில்லை. டிசம்பர் 2012 நாக்பூர் டெஸ்ட் என்று நினைக்கிறேன். சச்சின் அவுட் ஆன பிறகு, அப்போதுதான் சச்சினிடம் அவரது முடிவு குறித்து கேட்கலாம் என்று எங்களுக்குத் தோன்றியது. ஏனெனில் அதுதான் என் வேலை, அணித் தேர்வுக்குழுவின் தலைவராக என்னுடைய வேலை அது. அவரிடம் பேசிய போதுதான் அவரது மனதில் என்ன இருக்கிறது என்பது தெரிந்தது.

சச்சின் என்றல்ல எந்த ஒரு வீரரையும் ‘போதும், நாங்கள் உன்னை நீக்கப்போகிறோம்’ என்று கூறுவதில்லை. ‘உங்கள் மனதில் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?;’ என்றுதான் கேட்போம். சச்சின் அப்படித்தான் இனி ஒருநாள் போட்டிகளில் ஆடப்போவதில்லை என்று முடிவெடுத்தார்.

சேவாக் வருத்தம் குறித்து..

தன்னை டெஸ்ட் அணியிலிருந்து நீக்கியது காயமேற்படுத்தியதாகவும், தனக்கு பிரியாவிடை டெஸ்டில் ஆட வாய்ப்பளிக்காததும் காயப்படுத்துகிறது என்று சேவாக் கூறியது பற்றி சந்தீப் பாட்டீல், சேவாக் உள்ளிட்ட அத்தகைய வீரர்கள் மீது தனக்கு அனுதாபம் உள்ளது என்று கூறினாலும், “அனைவருக்கும் பிரியாவிடை போட்டி அளிக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் அது தவறு. மேலும் இது வீரர்களின் தேர்வு அல்ல, பிசிசிஐ-யின் முடிவு. ரசிகர்கள் முன்னிலையில் ஓய்வு பெறாமல் போவது எப்படியிருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் நானும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டவன் தான். சேவாக், கங்குலி, சச்சின் என்று நாம் பேசத்தொடங்கினால், சச்சினுக்கு பிரியாவிடை டெஸ்ட் அளித்தது முற்றிலும் வேறுபட்டதாகும்.

அதன் பிறகுதான் சில வீர்ர்களும் தனக்கும் இப்படியொரு பிரியாவிடை கிடைக்க வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் அது நடக்கவில்லை, இதனால் அவர்கள் வருத்தமடைகின்றனர், எரிச்சலடைகின்றனர். ஆனால் அவர்கள் ஏன் தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று வருத்தமடைகிறார்கள் என்பது எனக்கு புரிகிறது. விளையாட்டு என்பது அதுதான். ஓய்வு பெற்றுவிட்டால், நாம் சொல்லத் துணியாததை சொல்வோம், பிறகு அதற்கு வருத்தம் தெரிவிப்பது என்று செல்லும், ஆகவே இத்தகைய விஷயங்களுக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

இவ்வாறு கூறினார் பாட்டீல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x