Published : 30 Sep 2014 11:20 AM
Last Updated : 30 Sep 2014 11:20 AM

இன்று லாகூர்-பெர்த் அணிகள் மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸின் அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் ஆட்டம்

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் இன்று ஏ பிரிவில் கடைசி லீக் ஆட்டத்தில் லாகூர் லயன்ஸ் – பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தின் முடிவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் என்பதால் இப்போட்டி குறித்து எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த ஆட்டத்தில் லாகூர் லயன்ஸ் சிறப்பான ரன் விகிதத்துடன் வெற்றி பெற்றால் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும், சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேறிவிடும்.

அதே நேரத்தில் பெர்த் ஸ்கார்சர்ஸ் வென்றால் லாகூர் அணி வெளியேறும். சென்னை எளிதாக அரையிறுதிக்கு முன்னேறிவிடும். பெர்த் அணி ஏற்கெனவே போட்டியில் இருந்து வெளியேறிவிட்டதால் ஆட்டத்தின் முடிவு அந்த அணிக்கு எவ்வித பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

இதுவரை 4 போட்டிகளில் பங்கேற்றுள்ள சென்னை அணி இரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு போட்டியில் முடிவு கிடைக்கவில்லை என்ற நிலையில் 10 புள்ளிகளுடன் ஏ பிரிவில் 2-வது இடத்தில் உள்ளது. ஏ பிரிவில் கொல்கத்தா தான் பங்கேற்ற 3 லீக் ஆட்டங்களில் வென்று அரையிறுதிக்கு ஏற்கெனவே முன்னேறிவிட்டது.

ஏ பிரிவில் உள்ள மற்றொரு அணியான லாகூர் லயன்ஸ் இதுவரை ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு போட்டியில் முடிவு இல்லை என்ற நிலையுடன் 6 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் அந்த அணி வெற்றால் மேலும் 4 புள்ளிகள் பெற்று, 10 புள்ளிகளுடன் சென்னை அணியுடன் 2-வது இடத்தை பிடிக்கும். இதையடுத்து ரன் விகிதம் அடிப்படையில் முன்னணியில் உள்ள அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.

பெங்களூரில் இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x