Published : 13 Jun 2019 11:46 AM
Last Updated : 13 Jun 2019 11:46 AM

‘கேட்ச்களை விடுகிறார்... ஆனால் குழந்தையைப் பறிகொடுத்தவர்’ - பாகிஸ்தானிய ரசிகரின் வேதனையும் ஏமாற்றமும் கலந்த  உணர்வு

நேற்று பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே டாண்ட்டனில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி 307 ரன்களை அடித்ததே அதிர்ஷ்டம்தான் என்று கூறும் விதமாக ஆசிப் அலி 2 கேட்ச்களை நழுவ விட்டார், இரண்டுமே ஆஸ்திரேலிய தொடக்க வீரர்களான கேப்டன் ஏரோன் பிஞ்ச் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு விடப்பட்ட கேட்ச்கள்.

 

ஆசிப் அலி தன் 2 வயது குழந்தையை புற்றுநோய்க்கு பறிகொடுத்து தீராத சோகத்திலிருக்கும் ஒரு தந்தையாவார்.

 

இந்நிலையில் வார்னருக்குக் கேட்ச் விட்டபோது ஸ்டேடியத்தில் ஆசிப் அலிக்குப் பின்னால் ஒரு பாகிஸ்தானிய ரசிகர் இடுப்பில் கையை வைத்து கலவையான ஒரு உணர்வை வெளிப்படுத்தினார், கடும் ஏமாற்றம் அவரது முகத்தில் தெரிந்தது, தொலைக்காட்சியில் அவரது எதிர்வினை காட்டப்பட்டது.

 

இந்நிலையில் ஆஸ்திரேலிய இன்னிங்ஸ் முடிந்தவுடன் பாகிஸ்தானிய வர்ணனையாளர் ஜைனாப் அப்பாஸ் யார் அந்த ரசிகர் அவரது உணர்வு என்ன என்பதைக் கண்டுபிடிக்க அவரிடமே நேராக மைக்கை எடுத்துக் கொண்டு சென்று பேசினார். பிறகு ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் அந்த ரசிகர் கூறியது செய்தியாக வெளியானது.

 

அதில் அந்த ரசிகர்  பாகிஸ்தானிய நிருபரிடம் கூறியதாவது:

 

மிகவும் நேரடியான கேட்ச் அது.  எனக்கு முன்னால் இது நடப்பதைப் பார்த்த போது கடும் ஏமாற்றம் ஏற்பட்டது. அதுதான் என் முகத்தில் வெளிப்படையாக தெரிந்திருக்கும்.

 

அவர் கையில் பந்து விழுந்ததைப் பார்த்தேன் ஆனால் அவர் நழுவவிட்டார். உண்மையில் என் கண் எதிரே இப்படி ஒரு கேட்சை விட்டது எனக்கு கடும் ஏமாற்றத்தை அளித்தது.  ஆனால் அவர் எனக்கு மிக அருகில் இருந்தும் நான் அவரை ஒன்றும் சொல்லவில்லை. காரணம் இப்போதுதான் ஒரு குடும்ப துயரத்திலிருந்து மீண்டு வந்துள்ளார். அதனால் நான் அவரை சத்தம் போடவில்லை.

 

என்று ஆசிப் அலி குழந்தையைப் பறிகொடுத்ததைக் குறிப்பிட்டு தன் வேதனையையும் ஏமாற்றத்தையும் தெரிவித்தார் அந்த ரசிகர்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x