Published : 07 Jun 2019 08:41 AM
Last Updated : 07 Jun 2019 08:41 AM

மே.இ.தீவுகளைக் காலி செய்த அராஜகமான நடுவர் தீர்ப்புகள்: உ.கோப்பையா என்ன இது? மே.இ.தீவு வீரர்கள் ஆவேசம்

ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகளுக்கு இடையிலான நேற்றைய உலகக்கோப்பை ஆட்டம் மிகச்சிறப்பான மேட்சாக அமைந்தது, ஆனால் நடுவர்கள் ஒருமுறை, இருமுறை தவறிழைத்தால் ‘மனிதத் தவறு’ என்று அதற்கு ஒரு நியாயத்தை வழங்க முடியும், ஆனால் ஒரு அணிக்கு எதிராக தொடர்ச்சியாக தீர்ப்புகளை வழங்கினால் அது வெறும் தவறு என்பதைத் தாண்டிய அநியாயமாகவே மாறும். அப்படித்தான் நடந்தது நேற்று.

 

நடுவர்கள் கஃபானே, ருசிரா பாலியாகுருகே ஆகியோர் பல தீர்ப்புகளை யோசனையின்றி மே.இ.தீவுகளுக்கு எதிராக வழங்கினர். இது உலகக்கோப்பை போட்டியா என்ன என்று மே.இ.தீவுகள் முகாமில் கடும் அதிருப்தியும் கோபமும் ஏற்பட்டது.

 

இதைத்தான் மே.இ.தீவுகள் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்தார்:   ‘இந்த ஆட்டத்தில் நடுவர் தீர்ப்புகள் அராஜகம். அவுட் கேட்டு ஒருமுறை அப்பீல் செய்யலாம் அதுதான் அனுமதிக்கப்பட்டது.  இதைவிடுத்து இருமுறை மும்முறை நான்முறை நடுவரிடம் மன்றாடுவது முறையிடுவது, முகத்தில் ஏமாற்றத்தைக் காட்டுவ்வது, ஏதோ நடுவர் தவறாகத் தீர்ப்பளித்து விட்டார் என்பது போல் உடல்மொழியில் அவரது முடிவுகளை மாற்ற நினைப்பது என்பதை ஆஸ்திரேலியர்கள் செய்தனர்.

 

நடுவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர், அப்படியென்றால் அவர்கள் பலவீனமானவர்களே. ஆட்டத்தின் நடுவர்கள் கஃபானே, பாலியாகுருகே அராஜகமான தீர்ப்புகளை மே.இ.தீவுகளுக்கு எதிராக வழங்கினர்’ என்று கடுமையாகச் சாடினார்.

 

கார்லோஸ் பிராத்வெய்ட்:

 

நான் இதைக்கூறினால் அபராதம் விதிக்கப்படுவேனா என்பது தெரியவில்லை. அம்பயரிங் வெறுப்பாக இருந்தது.  நாங்கள் பந்து வீசும் போது தலைக்குக் கீழ் சென்ற பந்துகள் சிலவற்றுக்கு வைடு கொடுத்தனர்.  ஒரே ஒவரில் 3 தீர்ப்புகள் படுமோசம். இது ஓய்வறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

 

பெரிய விரட்டலில் கிறிஸ் கெய்லை இழப்பது தொடக்கத்தை முறியடிப்பதாகும், அவர் மட்டுமே 180 ரன்களை எடுக்கக் கூடியவர். ஆனால் அவருக்கு 3 முறை தவறிழைக்கப்பட்டது என்றார்.

 

கெய்ல் ஒரே ஒவரில் இருமுறை ஸ்டார்க் ஓவரில் ரிவியூ செய்தார். இருமுறையும் கள நடுவர் தீர்ப்பு மாற்றியமைக்கப்பட்டது.  பந்து ஸ்டம்பை உரசிச் சென்ற போது மட்டையில் பட்டு கேட்ச் ஆனதாக கஃபானே தீர்ப்பளித்தார். பந்து ஸ்டம்பை உரசிச் சென்று பைல்கள் விழவில்லை, கெய்ல் தப்பியது வேறு கதை. ஆனால் கடைசியில் எல்.பி தீர்ப்பு அம்பயர்ஸ் கால் ஆனது. ஆனால் கொடுமை என்னவெனில் அதற்கு முந்தைய பந்து ஸ்டார்க் வீசியது மிகப்பெரிய நோ-பால் கிட்டத்தட்ட காலை கிரீசுக்கு வெளியே நன்றாக ஒரு அடி முன்னால் வைத்து வீசினார், இதை நடுவர் கவனிக்கவில்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இதை நோ-பால் என்றிருந்தால் அடுத்தது ஃப்ரீஹிட்தான், ஆனால் அடுத்த பந்து கெய்ல் அவுட். எல்.பி. இதெப்படி இருக்கு?

 

ஜேசன் ஹோல்டர் கூறுகிறார், “நான் இதை தொலைக்காட்சி திரையில் பார்த்தேன் எனக்கு சிரிப்புதான் வந்தது.  என்னால் நம்ப முடியவில்லை, எங்களுக்கு சாதகமாக எதுவும் செல்லவில்லை.

 

நடுவர் தீர்ப்புகள் எங்களுக்கு எதிராக அமைந்தன. நடுவரின் நேர்மையான தவறுகள் என்று நினைக்கிறேன். இதைப்பற்றி என்ன கூறுவதென்றே தெரியவில்லை. வேடிக்கையான சூழ்நிலை, அனைத்து தீர்ப்புகளும் எங்களுக்கு எதிராகச் சென்றன. நாங்கள் ரிவியூ செய்ய வேண்டியதாயிற்று. ஆனால் இவையும் ஆட்டத்தின் ஒரு பகுதிதான்” என்றார் நாசுக்காக.

 

ஹோல்டருக்கு ஒரு முறை மேக்ஸ்வெல் பந்தில் நாட் அவுட்டுக்கு அவுட் கொடுக்கப்பட்டது, பிறகு ஸாம்பா பந்திலும் நாட் அவுட்டுக்குஅவுட் கொடுக்கப்பட்டது. இரண்டு முறையும் பந்து எல்.பி.க்கு சம்பந்தமில்லாமல் சென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x