Published : 21 Mar 2018 09:02 AM
Last Updated : 21 Mar 2018 09:02 AM

துபாய் ஓட்டலில் ஷமி 2 நாட்கள் தங்கினார்: கொல்த்தா போலீசாரிடம் உறுதி செய்தது பிசிசிஐ

துபாய் ஓட்டலில் முகமது ஷமி 2 நாட்கள் தங்கியிருந்தது உண்மைதான் என கொல்கத்தா போலீசாரிடம் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் கொல்கத்தா போலீஸில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், இங்கிலாந்தை சேர்ந்த முகமது பாயின் வற்புறுத்தலின் பேரில் கொல்கத்தாவில் உள்ள பாகிஸ்தானை சேர்ந்த அலிஸ்பா என்ற பெண்ணிடம் இருந்து முகமது ஷமி பணம் பெற்றுக் கொண்டதாக கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 16-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடர் முடிவடைந்தவுடன் முகமது ஷமி, துபாய் சென்றாரா என்பதை அறிந்து கொள்வதற்காக அவரது பயண விவரங்களை அளிக்கும்படி கொல்கத்தா போலீஸார் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியிருந்தனர். இதற்கு பிசிசிஐ தரப்பில் இருந்து அளிக்கப்பட்டுள்ள பதிலில், “முகமது ஷமி துபாய் சென்றது உண்மைதான். பிப்ரவரி 17 மற்றும் 18-ம் தேதிகளில் அவர், துபாய் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக உத்தரபிரதேசத்தில் உள்ள அம்ரோகாவில் உள்ள முகமது ஷமியின் வீட்டுக்கு சென்று கொல்கத்தா போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு முகமது ஷமியும் அவரது குடும்பத்தினரும் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளனர். ஷமி மீது ஹசின் ஜகான், தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், கொலை செய்ய முயற்சிப்பதாகவும், முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகாரின் பேரில் முகமது ஷமி மீது கொலை முயற்சி, குடும்ப வன்முறை, குற்றச்சதி, காயப்படுத்துதல், பலாத்காரம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஹசின் ஜஹானின் குற்றச்சாட்டுகளை மறுத்த ஷமி, யாரோ சிலர் அவரை தவறுதலாக வழிநடத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x