Published : 07 Mar 2018 10:05 AM
Last Updated : 07 Mar 2018 10:05 AM
உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் 16 வயதான இந்திய வீராங்கனையான மனு பாகர் 2-வது தங்கப் பதக்கம் வென்றார்.
உலக துப்பாக்கி சுடுதல் போட்டி மெக்சிகோவின் குவாடலஜரா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஏற்கெனவே தங்கப் பதக்கம் வென்றிருந்த இந்திய வீராங்கனை மனு பாகர், அணிகள் பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்று அசத்தி உள்ளார். 10 மீட்டர் ஏர் பிஸ்டர் அணிகள் பிரிவில் இந்தியாவின் ஓம் பிரகாஷ் மிதர்வால், மனு பாகர் ஜோடி 476.1 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றது. ஜெர்மனியின் சாண்ட்ரா கிறிஸ்டியன் ரீட்ஸ் ஜோடி 475.2 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், பிரான்சின் செலின் கோபரெல்லி, ஃப்ளோரியன் ஃபோகெட் ஜோடி 415.1 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றின. இதே பிரிவில் மற்றொரு இந்திய ஜோடியான மகிமா துர்கி, ரிஸ்வி ஜோடி 372.4 புள்ளிகள் சேர்த்து 4-வது இடம் பிடித்தது.
10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் இந்தியாவின் தீபக் குமார், மெஹூலி கோஷ் ஜோடி 435.1 புள்ளிகள் சேர்த்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. சீனாவின் ஹாங், சென் கெடூவோ ஜோடி 502 புள்ளிகள் குவித்து உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றது. ருமேனியாவின் அலின் மோல்டோவனு, லாரா ஜியோர்ஜேடா காமன் ஜோடி 498.4 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது.
உலக கோப்பை தொடரின் 3-வது நாள் முடிவில் பதக்கப் பட்டியலில் இந்தியா 3 தங்கம், 4 வெண்லகப் பதக்கத்துடன் முதலிடம் வகித்தது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT