Published : 13 May 2019 01:37 PM
Last Updated : 13 May 2019 01:37 PM
ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் களத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் கெய்ரன் பொலார்ட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
12-வது ஐபிஎல் சீசன் சாம்பியன் பட்டத்தை ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாகக் கைப்பற்றியது. ஹைதராபாத்தில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை ஒரு ரன்னில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றது.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. 150 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு148 ரன்கள் சேர்த்து ஒரு ரன்னில் தோல்வி அடைந்தது.
இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் பொலார்ட் 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி ஓவரை பிராவோ வீசினார். அப்போது ஒரு பந்தை வைடாக வீசியபோதிலும் அதற்கு நடுவர் வைடு பால் தரவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பொலார்ட் வானத்தில் பேட்டை தூக்கிப் போட்டு பிடித்தார்.
அடுத்த பந்தை பிராவோ வீச வந்தபோது திடீரென பேட்டிங் செய்வதில் இருந்து பொலார்ட் விலகிச் சென்றார். இதனால், சர்ச்சையானது. அப்போது நடுவர்கள் நிதின் மேனன், இயான் கவுட் ஆகியோர் பொலார்டின் சென்று பேசினார்கள். அப்போது, பிராவோ வைடாக வீசிய பந்துக்கு வைடு கொடுக்காதக் கிண்டல் செய்து பேசி பொலார்ட் வாக்குவாதம் செய்து விட்டு மீண்டும் பேட் செய்தார்.
போட்டி முடிந்த பின் கள நடுவர்கள் மேனன், இயான் கவுட் ஆகியோர் போட்டி நடுவரிடம் பொலார்டின் நடவடிக்கை குறித்து புகார் செய்தனர். பொலார்ட்டின் நடவடிக்கையை ஆய்வு செய்த போட்டி நடுவர், ஐபிஎல் ஒழுக்க விதிமுறை 2.8 பிரிவை மீறி லெவல் ஒன் குற்றத்தை பொலார்ட் செய்துள்ளார் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவீதத்தை பொலார்டுக்கு அபராதமாக விதிக்கப்படுகிறது என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT