Last Updated : 05 May, 2019 06:45 PM

 

Published : 05 May 2019 06:45 PM
Last Updated : 05 May 2019 06:45 PM

டூப்பிளசிஸ், ரெய்னா காட்டடி; 17 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே: பஞ்சாப் அணிக்கு 171 ரன்கள் இலக்கு

சண்டிகரில் நடந்த ஐபிஎல் போட்டியின் 55-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற 171 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் டூப்பிளசிஸ், ரெய்னா ஆகியோர் காட்டிடி அரை சதம் அடித்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். டூப்பிளசிஸ் 55 பந்துகளில் 96 ரன்களும், ரெய்னா  38 பந்துகளில் 53 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

அணியில் இருவர் அடித்த ஸ்கோர்தான் அதிகபட்சமாகும். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 150 ரன்களுக்கு 2-வது விக்கெட்டை இழந்த சிஎஸ்கே அணி அடுத்த 17 ரன்களைச் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

மூவரும் மோசம்

குறிப்பாக கேதார் ஜாதவ், ராயுடு, வாட்ஸன் ஆகியோர் இந்த முறையும் சொதப்பினார்கள். வாட்ஸன் ஒரு போட்டியைத் தவிர மற்ற போட்டிகள் அனைத்திலும் மோசமாக விளையாடினார். 14 போட்டிகளில் 258 ரன்கள் மட்டுமே லீக் ஆட்டங்களில் வாட்ஸன் சேர்த்துள்ளார்.

அடுத்ததாக கேதார் ஜாதவ் 14 ஆட்டங்களில் ஒரு அரை சதம் உள்பட 162 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். சராசரி 18 ரன்கள் மட்டும்தான். உலகக் கோப்பை போட்டிக்குத் தேர்வாகியுள்ள கேதார் ஜாதவ் மின்னல் வேகத்தில் வரும், ஸ்விங் ஆகும் ஆடுகளத்தில் என்ன செய்யப்போகிறார் எனத் தெரியவில்லை.

உலகக் கோப்பை போட்டிக்குத் தேர்வாகாத வருத்தத்தில் விளையாடி வரும் ராயுடு, இதுவரை ஒரு அரை சதம் உள்பட 219 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இவரின் சராசரி லீக் ஆட்டங்களில் 20 ரன்கள் மட்டுமே.

கடந்த 14 லீக் ஆட்டங்களில் 2 போட்டிகளைத் தவிர்த்து பெரும்பாலான போட்டிங்களில் அணியின் சுமையைத் தோளில் சுமந்து வெற்றிக்கு வழிகாட்டியவர் தோனி மட்டுமே. ராயுடு, ஜாதவ், வாட்ஸனின் மோசமான பேட்டிங் லீ ஆட்டங்களோடு முடிந்துவிட்டால் அணிக்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.

அஸ்வின் தான் இன்னும் வேர்ல்டு கிளாஸ் பந்துவீச்சாளர் என்பதைத் தொடர்ந்து நிரூபித்துள்ளார். முகமது ஷமி இந்த சீசன் முழுவதும் சிறப்பாகப் பந்து வீசியுள்ளார். இவரின் பந்துவீச்சு நிச்சயம் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்குப் பக்கபலமாக இருக்கும்

டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். டூப்பிளசிஸ், வாட்ஸன் ஆட்டத்தைத் தொடங்கினார். 7 ரன்கள் சேர்த்த நிலையில், சாம் கரன் பந்துவீச்சில் வாட்ஸ் போல்டாகி வெளியேறினார்.

2-வது விக்கெட்டுக்கு வந்த ரெய்னா, டூப்பிளசிஸும் அணியை வழிடநடத்தினர். இருவரும் அவ்வப்போது பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி ரன்க்ளைச் சேர்த்தனர்.

பவர் ப்ளே ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் சேர்த்திருந்தது. 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் சேர்த்திருந்தது. டூப்பிளசிஸ் 37 பந்துகளிலும், ரெய்னா 34 பந்துகளிலும் அரை சதம் அடித்தனர்.

முருகன் அஸ்வின் வீசிய 15-வது ஓவரில் ரெய்னா ஒரு பவுண்டரியும், டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் அடித்து விளாசினர். ஆன்ட்ரூ டை வீசிய 16-வது ஓவரில் டூப்பிளசிஸ் 2 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விளாசி ரன் ரேட்டை உயர்த்தினார்.

17 ரன்களுக்கு 4 விக்கெட்

சாம் கரன் வீசிய 17-வது ஓவரில் ஷமியிடம் கேட்ச் கொடுத்து ரெய்னா 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். 150 ரன்களுக்கு 2-வது விக்கெட்டை இழந்தது சிஎஸ்கே அணி.

அடுத்து தோனி களமிறங்கினார். சாம்கரன் வீசிய 19-வது ஓவரில் காலைநோக்கி வந்த யார்கர் பந்தை சமாளிக்க முடியாமல் டூப்பிளசிஸ் போல்டாகி 96 ரன்களில் வெளியேறினார். இதில் 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் அடங்கும்.

அதன்பின் முகமது ஷமி வீசிய கடைசி ஓவரில் ராயுடு ஒரு ரன்னிலும், ஜாதவ் டக் அவுட்டிலும்வெளியறினர். 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 5 விக்கெட்இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்தது. தோனி 10 ரன்களுடன், பிராவோ ஒரு ரன்னுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பஞ்சாப் அணி தரப்பில் சாம் கரன் 3 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x