Published : 16 Apr 2019 06:35 PM
Last Updated : 16 Apr 2019 06:35 PM
முப்பரிமாண விஜய் சங்கரை அம்பதி ராயுடுவுக்குப் பதிலாக இந்திய உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்ததாக அணித்தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் நேற்று உலகக்கோப்பை அணித்தேர்வு குறித்து பேட்டியளித்தார்.
ராயுடுவுக்குப் பதில் விஜய் சங்கர் ஏன் என்ற கேள்விக்குப் பதில் அளித்த பிரசாத், “ராயுடுவுக்கு சில வாய்ப்புகள் அளித்தோம், ஆனால் விஜய் சங்கர் முப்பரிமாணங்களை வழங்குகிறார், பேட் செய்வார், வானிலை மேகமூட்டமாக இருந்தால் பவுலிங் செய்வார், பிளஸ் அவர் ஒரு பீல்டர், நாங்கள் விஜய் சங்கரை4ம் நிலை வீரராகப் பார்க்கிறோம்” என்றார்.
இந்நிலையில் தன்னை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யாதது குறித்து மவுனம் கலைத்த ராயுடு அது பற்றி நேரடியாக எதுவும் குறிப்பிடாமல் எம்.எஸ்.கே.பிரசாத், விஜய் சங்கர் பற்றி குறிப்பிட்ட 3டி ப்ளேயர் என்பதைச் சூசகமாகச் சுட்டிக் காட்டி தன் ட்விட்ட்ர் பக்கத்தில், “இப்போதுதான் புதிய 3டி கண்ணாடிகளை ஆர்டர் செய்தேன், உலகக்கோப்பை போட்டிகளைப் பார்ப்பதற்காக” என்று சற்றே கிண்டல் செய்துள்ளதாகத் தெரிகிறது.
விஜய் சங்கர் தேர்வை சுனில் கவாஸ்கரும் ஆதரித்து, “மிகவும் உதவிகரமான கிரிக்கெட் வீரர்” என்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகளில் ராயுடு சொதப்பினார். ஐபிஎல் கிரிக்கெட்டிலும் தற்போது எதிர்பார்ப்பிற்கு ஏற்ப ஆடவில்லை. இதுதான் அவரை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யாததற்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது.
47.05 என்ற சராசரி வைத்திரும்தும் ராயுடுவுக்கு இடமளிக்கப்படாதது பரவலான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. முன்னாள் வீரர்கள் கம்பீர், முரளி கார்த்திக் இருவரும் ராயுடுவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT