Published : 05 Sep 2014 09:30 AM
Last Updated : 05 Sep 2014 09:30 AM
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள 9 தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவிற்கு வரும் 10-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்யும்படி அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 32 தனியார் நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. எனவே அந்த நிறுவனங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் முழுவதும் முடக்கப்பட்டுள்ளன. இவ்வழக்கில் வரும் 20-ம் தேதி இறுதி தீர்ப்பு வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் கடந்த வாரம் லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ், ரிவர்வே அக்ரோ பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட 9 தனியார் நிறுவனங்கள் சார்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதி அரவிந்த்குமார் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
9 தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், “இந்த தனியார் நிறுவனங்கள் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு சொந்தமானது அல்ல. அவர்கள் எங்களுடைய நிறுவனங்களில் இயக்குநராகவோ, முக்கிய பொறுப்புகளோ வகித்தது இல்லை.
ஜெயலலிதா எங்களுடைய நிறுவனங்களில் பங்குதாரராக கூட இருக்கவில்லை. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மட்டுமே பங்குதாரர்களாக இருந்தார்கள். இந்த காரணத்தைக் காட்டி எங்களுடைய நிறுவனங்களை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் முடக்கியது ஏற்புடையது அல்ல. இந்த நடவடிக்கை சட்டபடி தவறு. எனவே சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து 9 தனியார் நிறுவனங்களையும் விடுவிக்க வேண்டும்''என கோரப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி அரவிந்த்குமார், 9 தனியார் நிறுவனங்களின் மனுக்களுக்கு வரும் 10-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்யுமாறு அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிற்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து வழக்கு 10-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 9 தனியார் நிறுவனங்கள் தொடர்ந்துள்ள இந்த மனுவை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT