Last Updated : 28 Apr, 2019 08:23 PM

 

Published : 28 Apr 2019 08:23 PM
Last Updated : 28 Apr 2019 08:23 PM

முதலிடத்தில் டெல்லி; 6 ஆண்டுகளுக்குப் பின் ப்ளே-ஆஃப் சுற்று: 3-வது ஆண்டாக லீக் சுற்றை தாண்டாத கோலி படை

12-வது ஐபிஎல் சீசனின் ப்ளே-ஆப் சுற்றுக்கு 2-வது அணியாக ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி தகுதி பெற்று புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்தது.

ஸ்ரேயாஸ் அய்யர், தவண் ஆகியோரின் முத்தாய்பான அரைசதம், ரூதர்போர்டின் கடைசி நேர அதிரடி ஆகியவற்றால் டெல்லியில் இன்று நடந்த 46-வது ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 16 ரன்களில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. 188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 16 ரன்களில் தோல்வி அடைந்தது

தாதா, பாண்டிங்

 கடந்த 2012-ம் ஆண்டுக்குப்பின் டெல்லி அணி ப்ளே-ஆப் சுற்றுக்குள் இந்த சீசனில்தான் செல்கிறது. இந்த வெற்றியின் மூலம் 12 போட்டிகளில் 8 வெற்றிகள், 4 தோல்விகள் என மொத்தம் 16 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்ததுள்ளது. சிஎஸ்கே அணி 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

ரிக்கி பாண்டிங் பயிற்சி, தாதா கங்குலியின் ஆலோசனை ஆகியவை டெல்லி கேபிடல்ஸ் அணி ப்ளே-ஆப் சுற்றுக்கு செல்ல முக்கியக் காரணமாகும். இதுதவிர அணியில் உள்ள வீரர்களில் பெரும்பகுதி இளம் வீரர்கள் என்பது முத்தாய்ப்பாகும்.

தொடர்ந்து 3-வது ஆண்டு

அதேசமயம், விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி 12 போட்டிகளில் 4-ல் வெற்றியும், 8-ல் தோல்வியும் கண்டு 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. இன்னும் 2 லீக் ஆட்டங்கள் இருந்தாலும், அதில் வெற்றி பெற்றால் கூட ப்ளே-ஆப் சுற்றுக்குள் செல்ல முடியாது. தொடர்ந்து 3-வது ஆண்டாக ப்ளே ஆப் சுற்றுக்குள் செல்லாமல் வெளியேறுகிறது கோலி தலைமை.

உலகின் சிறந்த அணியான இந்திய அணிக்கு தலைமை ஏற்று வழிநடத்தும் கோலி, ஐபிஎல் போட்டியில் தன்னுடைய அணியை ப்ளே-ஆப் சுற்றுக்குள் கொண்டு செல்ல முடியாமல் 3 ஆண்டுகளாக தடுமாறுகிறார். ஒருமுறை கூட கோப்பையை வென்றுகொடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு அணி தொடர்ந்து விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய இரு வீரர்களை மட்டுமே பயணித்து வருவதால் ஏற்பட்ட பின்னடைவு.

திருப்பு முனை ஓவர்கள்

இந்த போட்டியில் டெல்லி அணி பேட்டிங் செய்யும் போது, பந்துவீசும் போது கடைசி இரு ஓவர்கள்தான் திருப்பு முனையாக இருந்தது. பேட்டிங் செய்தபோது, ரூதர்போர்ட், அக்ஸர்படேல் அதிரடியாக 30 ரன்களுக்கு மேல் கடைசி இரு ஓவர்களில் சேர்த்தது அணியின் ஸ்கோரை 180 ரன்களுக்கு மேல் கொண்டு வந்தது.

அதேபோல, ரபாடா, இசாந்த் சர்மா வீசிய கடைசி இரு ஓவர்கள் கட்டுக்கோப்பாக வீசி வெற்றியை ஆர்சிபியிடம் இருந்து பறித்தனர். டெல்லி அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக்கொடுத்த ஷிகர்தவண் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

பார்திவ் மட்டுமே ஆறுதல்

188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் அணி களமிறங்கியது. பார்திவ் படேல், கோலி ஆட்டத்தைத் தொடங்கினர்.

பார்திவ்படேல் வழக்கம் போல் அதிரடியாக பேட் செய்ததால், ரன்ரேட் ஓவருக்கு 10வீதம் சென்றது. லாமிசானே வீசிய 3-வது ஓவரில் பர்தீவ் படேல் 3 பவுண்டரிகளை விளாசினார். இசாந்த் சர்மா வீசிய 5-வது ஓவரில் கோலி பவுண்டரி, சிக்ஸர் விளாசினார்.

ரபாடா வீசிய 6வது ஓவரில் படேலிடம் கேட்ச் கொடுத்து 39 ரன்னில் வெளியேறினார்  பார்திவ் படேல்.

அடுத்து டீவில்லியர்ஸ் வந்த சிறிதுநேரத்தில் கோலி ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயில் பெங்களூரு அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் சேர்த்தது.

அக்ஸர் படேல் வீசிய 8-வது ஓவரில் ரூதர்போர்டிடம் கேட்ச் கொடுத்து கோலி 23 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் சேர்த்திருந்தது.

ரூதர்போர்ட் வீசிய 12-வது ஓவரில் படேலிடம் கேட்ச் கொடுத்து டிவில்லியர்ஸ் 17ரன்களில் ஆட்டமிழந்தார். அமித் மிஸ்ரா வீசிய 13-வது ஓவரில் கிளாஸன் 3 ரன்னிலும், அதே ஓவரின் கடைசிப்பந்தில் துபே 24ரன்கள் சேர்த்தநிலையிலும் ஆட்டமிழந்தனர். ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளைய இழந்ததால் பெங்களு அணி தடுமாறியது.

6-வது விக்கெட்டுக்கு குர்கீரத், ஸ்டோனிஸ் சேர்ந்தனர். கடைசி 5 ஓவர்களுக்கு 62 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. இசாந்த் சர்மா வீசிய 17-வது ஓவிரில் குர்கீரத் 2 பவுண்டரிகளும், சிக்ஸரும் விளாசினார். கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்டது.

இசாந்த் சர்மா வீசிய 19-வது ஓவரில் குர்கீரத் சிங் 27 ரன்கள் சேர்த்தநிலையில் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டது. ரபாடா பந்துவீசினார். வாஷிங்டன் சுந்தர் ஒரு ரன் சேர்த்த நிலையில், அய்யரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டோனிஸ் ஒரு சிக்ஸர் அடிக்க ஆட்டம் முடிவுக்கு வந்தது.

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து  16 ரன்களில் தோல்விஅடைந்தது ராயல் சேலஞ்சர்ஸ் அணி. ஸ்டோனிஸ் 32 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி அணித் தரப்பில் அமித் மிஸ்ரா, ரபாடா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தவண் அரைசதம்

dwjpgஆட்டநாயகன் விருது பெற்ற தவண் : படம் உதவி ஐபிஎல்100 

டாஸ்வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தவண், பிரித்வி ஷா ஆட்டத்தைத் தொடங்கினர். இருவரும் தொடக்கத்தில் இருந்த விளாசினர். வாஷிங்டன் சுந்தர் வீசிய 2-வது ஓவரில் பிரித்வி ஷா 2 பவுண்டரிகளையும், சாஹல் வீசிய 3-வது ஓவரில் தவண் ஒரு சிக்ஸ், பவுண்டரியையும், பிரித்வி ஷா பவுண்டரியும் அடித்தனர். இதனால் ஸ்கோர் 10 ரன்ரேட்டில் எகிறியது.

உமேஷ் யாதவ் வீசிய 4-வது ஓவரில் பர்தீவ் படேலிடம் கேட்ச் கொடுத்து பிரித்வி ஷா 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் வந்தார். தவணும், ஸ்ரேயாஸும் சேர்ந்து அதிரடியில் இறங்க பவர்ப்ளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு  59 ரன்கள் சேர்த்தது டெல்லி அணி. அதன்பின் இருவரும் நிதானமாக பேட் செய்யவே 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு டெல்லி 88 ரன்கள் சேர்த்தது.

அதிரடியாக பேட் செய்த தவண், 36 பந்துகளில் அரைசதம் அடித்து சாஹல் வீசிய 13வது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து ரிஷப் பந்த் வந்தார். சாஹல் வீசிய 15-வது ஓவரில் ஸ்ரேயாஸ் அய்யர் அடுத்தடுத்து இரு சிக்ஸர்களை விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார்.

அடித்து ஆட முற்பட்ட ரிஷப் பந்த் எல்பிடபில்யு முறையில் 7 ரன்னில் சாஹல் பந்துவீச்சில் வெளியேறினார். ஸ்ரேயாஸ் அய்யர் 35 பந்துகளில் அரைசதம் அடித்து, ஐபிஎல் போட்டியில் 14-வது அரைசதத்தை நிறைவு செய்தார்.

ஸ்ரேயாஸ் 50 ரன்கள்

iyerjpgஅரைசதம் அடித்த ஸ்ரேயாஸ் அய்யர்: படம் உதவி ஐபிஎல்100 

சுந்தர் வீசிய 16-வது ஓவரில் ஸ்ரேயாஸ் அய்யர் 52 ரன்கள் சேர்த்த நிலையில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த இங்க்ராம் ஒருசிக்ஸர்,பவுண்டரி உள்பட 11 ரன்கள் சேர்த்து விரைவாக ஆட்டமிழந்தார்.

6-வது விக்கெட்டுக்கு வந்த ரூதர்போர்ட், அக்ஸர் படேல் சேர்ந்தனர். 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களே டெல்லி அணி சேர்த்திருந்தது. ஆனால், கடைசி இரு ஓவர்களையும் ரூதர்போர்ட், படேல் இருவரும் பொளந்துகட்டினர்.

உமேஷ் வீசிய 19-வது ஓவரில் படேல் இருப வுண்டரிகளையும், ரூதர்போர்ட் ஒருசிக்ஸரையும் விளாசி 16 ரன்கள் சேர்த்தனர். சைனி வீசிய கடைசி ஓவரில் ரூதர்போர்ட் ஒரு சிக்ஸர்,பவுண்டரியும், படேல் ஒரு பவுண்டரியும் விளாசினர்.

20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. ரூதர்போர்ட் 28 ரன்களிலும், படேல் 16 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூரு தரப்பில் சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x