Last Updated : 09 Apr, 2019 08:53 AM

 

Published : 09 Apr 2019 08:53 AM
Last Updated : 09 Apr 2019 08:53 AM

சென்னை சேப்பாக்கத்தில் இன்று மோதல்: ரஸ்ஸல் அதிரடி சிஎஸ்கே சுழற்பந்து வீச்சாளர்களிடம் எடுபடுமா?

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.

சென்னை, கொல்கத்தா ஆகிய இரு அணிகளுமே 5 ஆட்டங்களில் விளையாடி தலா 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளன. எனினும் ரன்விகித அடிப்படையில் கொல்கத்தா அணி பட்டியலில் முதலிடத்திலும், சென்னை அணி 2-வது இடத்திலும் உள்ளன.

தோனி தலைமையிலான சென்னை அணி தனது கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.

அதேவேளையில் கொல்கத்தா அணி நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் கள் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்தில் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது.

இரு அணியிலும் உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதனால் சுழலுக்கு சாதகமான சேப்பாக்கம் ஆடுகளத்தில் இரு அணிகளைச் சேர்ந்த பேட்ஸ்மேன்களுக்கும் கடும் சவால் காத்திருக்கக்கூடும். ஹர்பஜன் சிங், இம்ரன் தகிர், ரவீந்திர ஜடேஜா ஆகியோரை உள்ளடக்கிய சென்னை அணியின் சுழற்பந்து வீச்சு கூட்டணி, பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியின் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

அதேவேளையில் மந்தமான ஜெய்ப்பூர் ஆடுகளத்தில் ராஜஸ்தான் அணிக்கு கடும் தொல்லைகளை கொடுத்தது கொல்கத்தா சுழற்பந்து வீச்சு கூட்டணி. சுனில் நரேன், குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா ஆகியோர் அபாயகரமான பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லரை தாக்குதல் பேட்டிங் தொடுக்க அனுமதிக்கவில்லை. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 139 ரன்களுக்குள் மட்டுப்படுத்தியிருந்தனர் கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்கள்.

எனேவே சேப்பாக்கம் ஆடுகளத்தில் இரு அணியின் சுழற்பந்து வீச்சு கூட்டணியும் சிறப்பாக செயல்படுவதில் ஆர்வம் காட்டக்கூடும். இதில் எந்த அணியின் சுழற்பந்து வீச்சு வெற்றியை தேடித்தரப்போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது. மேலும் அனைவரது பார்வையும் இரு அணியின் பேட்டிங் வரிசை மீதும் படிந்துள்ளது.

இரு அணியிலும் உள்ள சுழற்பந்து வீச்சாளர்களின் சவால்களை பேட்ஸ்மேன்கள் எந்த வகையில் எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற ஆர்வமும், எதிர்பார்ப்பும் ரசிகர்களை தொற்றிக் கொண்டுள்ளது. அதிலும் முக்கியமாக ஆட்டத்தின் எந்த ஒரு சூழ்நிலையிலும் வெற்றியை தேடித்தரக்கூடிய அதிரடி வீரரான ஆந்த்ரே ரஸ்ஸஸை சென்னை அணி எப்படி கையாளப்போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

டாப் ஆர்டர் பேட்டிங்கில் நித்திஷ் ராணா, ராபின் உத்தப்பா நம்பிக்கை அளிக் கக்கூடியவர்களாக உள்ளனர். ராஜஸ்தான் அணிக்கு எதிராக மட்டையை சுழற்றிய கிறிஸ் லின் (50), சுனில் நரேன் (47) ஆகியோர் பார்முக்கு திரும்பியிருப்பது அணியின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளது.

சென்னை அணியில் கடந்த ஆட்டத்தில் டுவைன் பிராவோவுக்கு பதிலாக களமிறங்கிய டு பிளெஸ்ஸிஸ் 38 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து அசத்தியிருந்தார்.

இதேபோல் நடுவரிசை பேட்டிங்குக்கு மாறியுள்ள அம்பதி ராயுடுவும் கடந்த ஆட்டத்தில் சிறப்பாக பேட் செய்தார். இவர்களிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். எல்லாவற்றுக்கும் மேலாக பேட்டிங்கின் போது இறுதிக்கட்ட ஓவர்களில் தோனி செலுத்தும் அதீத கவனமும் அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றுகிறது.

அதேபோல் இறுதிக்கட்ட ஓவர் களில் பந்து வீச்சாளர்களை தோனி பயன்படுத்தும் விதமும் அணிக்கு வலுசேர்க்கிறது. மீண்டும் ஒரு முறை அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வதில் தோனி முனைப்பு காட்டக்கூடும்.

மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஆந்த்ரே ரஸ்ஸல் இந்த சீசனில் அதீத பார்மில் உள்ளார். 4 இன்னிங்ஸ்களில் பேட் செய்துள்ள அவர் 51.75 சராசரியுடன் 207 ரன்களை குவித்துள்ளார்.

22 சிக்ஸர்களையும், 12 பவுண்டரிகளையும் விளாசியுள்ள ரஸ்ஸலின் ஸ்டிரைக் ரேட் 268.83 ஆக உள்ளது.

ஆந்த்ரே ரஸ்ஸல் மீது மட்டும் அதிக கவனமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில், “ஆந்த்ரே ரஸ்ஸல் மீது மட்டுமே அதிக கவனம் செலுத்தினால் அது எங்களுக்கு ஆபத்தாகவே முடியும். கொல்கத்தா அணியில் ரஸ்ஸலைத் தவிர கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் என மேலும் 6 பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதனால் ஆந்த்ரே ரஸ்ஸல் மீது மட்டும் அதிக கவனம் செலுத்திவிடக்கூடாது, இதில் நாங்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

ரஸ்ஸல் வலுவான வீரர்தான், அதேவேளையில் அந்த அணியில் மற்ற வீரர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஒன்று அல்லது இரு வீரர்களின் மீது மட்டும் கவனம் செலுத்தும் வகையில் எங்களது ஆட்டத் தயாரிப்புகள் மாறாது. ஆனால் இதுபோன்ற வீரர்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். சுழற்பந்து வீச்சோ, வேகப்பந்து வீச்சோ ரஸ்ஸல் போன்று அதிரடியாக விளையாடக்கூடிய வீரருக்கு எதிராக துல்லியமாக பந்துவீச வேண்டும்” என்றார்.

ஹாரி குர்னே

ராஜஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகமாகியிருந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரி குர்னே  சற்று தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். அவரது கட்டர்கள், யார்க்கர்கள் சென்னை அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும்.

நேரம் : இரவு 8

இடம் : சென்னை

நேரடி ஒளிபரப்பு:

ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x