Published : 27 Mar 2019 04:24 PM
Last Updated : 27 Mar 2019 04:24 PM
ரவிச்சந்திரன் அஸ்வினின் ‘மன்கட்’ ரன் அவுட் சர்ச்சைக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன, சர்ச்சைகளும் கிளம்பி வருகின்றன. நேற்றைய டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியும் சர்ச்சைக்கு விதிவிலக்கல்ல.
ரபாடாவும், ஷேன் வாட்சனும் மோதிக்கொண்டனர். வாட்சனின் தலைக்கும், பாதத்துக்கும் குறிவைத்து ரபாடா பவுன்சரையும், யார்க்கரையும் வீசினார். இரண்டையுமே வாட்சன் பவுண்டரிக்கு அனுப்பினார். இதனையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் மூண்டது, மட்டைப் பிட்சில் ரபாடாவின் 150 கிமீ வேகமும் ரபாடாவுக்கே பெப்பே காட்டியது. பிட்ச் அப்படி.
இன்னொரு சர்ச்சை என்னவெனில் 3வது ஓவரில் அம்பதி ராயுடு விக்கெட்டை இஷாந்த் சர்மா கொஞ்சம் அதிக உணர்ச்சியுடனும் நாடகத்தன்மையுடனும் கொண்டாடினார். இதனைப் பார்த்த ஷேன் வாட்சன் சிரித்தார். இது இஷாந்த் சர்மாவுக்கு கோபத்தை மூட்ட ஷேன் வாட்சனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், இதனையடுத்து கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் தலையிட்டு சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று.
இதற்குப் பிறகுதான் ரபாடா, வாட்சன் மோதல் ஏற்பட்டது, ரபாடாவின் பாதையை வாட்சன் மறைத்ததாக ரபாடா கடும் கோபமடைந்தார்.
147 ரன்கள் இலக்கை விரட்டும் போது சென்னை சூப்பர் கிங்ஸ் வாட்சனின் அதிரடியினால் இலக்கை எளிதில் வென்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 2 போட்டிகளில் வென்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT