Published : 09 Mar 2019 06:10 PM
Last Updated : 09 Mar 2019 06:10 PM

காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொள்வீர்களா?- ரசிகரின் கேள்விக்கு அஸ்வின் பதில்

 

 

'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் கலந்துகொள்வீர்களா என்று இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அஸ்வின் பதில் அளித்துள்ளார்.

 

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெள்ளிக்கிழமை அன்று, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். ரசிகர்கள் அவரின் கிரிக்கெட் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது ரசிகர் ஒருவர், 'காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொள்வீர்களா?' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

 

அதற்கு 'கண்டிப்பாக' என்று பதில் அளித்தார் அஸ்வின்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அப்போது, அவர்கள் இருவரும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தனர். குறிப்பாக ஹர்திக் பாண்டியா, பல பெண்களுடன் பாலியல் ரீதியிலான தொடர்பில் இருந்ததாகவும் அதைத் தனது வீட்டில் தயக்கமில்லாமல் சொல்வதாகவும் கூறியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதப்பொருளானது.

 

இதையடுத்து, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த ராகுல், பாண்டியா இருவரையும் அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து பிசிசிஐ நிர்வாகம் உத்தரவிட்டது. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் வீரர்கள் கலந்துகொள்வது குறித்து அதிருப்தியைத் தெரிவித்தது.

 

இந்நிலையில் அஸ்வினின் பதில், கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்பத்தியது.

 

அதேபோல, 'மீண்டும் ஒருநாள் போட்டி, டி20 போட்டிகளில் விளையாடுவீர்களா?' என்ற கேள்விக்கு, ''தினந்தோறும் என்னை மேம்படுத்திக்கொண்டே இருக்க முயற்சிக்கிறேன். மற்றவை என் கையில் இல்லை'' என்றார் அஸ்வின்.

 

கடைசியாக அடிலெய்டில், இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடந்த முதல் போட்டியில் அஸ்வின் விளையாடி இருந்தார். காயத்தின் காரணமாக அவர் போட்டிகளில் கலந்துகொள்ளாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x