Published : 22 Feb 2019 04:45 PM
Last Updated : 22 Feb 2019 04:45 PM
ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சிகள் நடத்தச் செலவிடும் பணம் அனைத்தையும், புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
பிசிசிஐ அமைப்பை நிர்வகிக்க உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிர்வாகிகள் குழு இந்த முடிவை எடுத்துள்ளது. புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி தீவிரவாத தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். வீரர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினர் உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பிசிசிஐ அமைப்பின் சிறப்பு பொதுக்குழுக்கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழுவின் தலைவர் வினோத் ராய் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு உதவ பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
வழக்கமாக ஐபிஎல் தொடக்க விழாவின் போது, தொடக்க விழா நிகழ்ச்சிகள் மிகப்பிரம்மாண்டமான முறையில் நடத்தப்படும். நடிகர், நடிகைகள் நடன நிகழ்ச்சிகள் போன்றவைகளும், வண்ண விளக்குகளும், வாணவேடிக்கைகளும் இருக்கும்.
புல்வாமா தாக்குதலில் நமது வீரர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடக்க விழா நிகழ்ச்சிகள் ஏதும் நடத்தப்படாது. அதற்குப்பதிலாக அந்த நிகழ்ச்சிக்குச் செலவிடும் பணம் அனைத்தையும், தாக்குதலில் பலியான வீரர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும். இதற்கான முடிவு இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே மார்ச் 23-ம் தேதி சென்னையில் தொடங்கும் முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து மோதுகிறது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT