Published : 12 Feb 2019 06:53 PM
Last Updated : 12 Feb 2019 06:53 PM

செய்ஃபர்ட்டுக்கு தோனி செய்த ஸ்டம்பிங், மிட்செல் எல்.பி.தீர்ப்பு : பரிசீலனையில் நியூஸி. நடுவர் தீர்ப்புகள்

செய்ஃபர்ட்டுக்கு தோனி செய்த ஸ்டம்பிங் தீர்ப்பு, மிட்செல் எல்.பி.தீர்ப்பு : பரிசீலனையில் நியூஸி. நடுவர் தீர்ப்புகள்

 

நியூஸிலாந்துக்கு எதிரான 3 டி20 போட்டிகளில் நியூஸிலாந்து தொடரை 2-1 என்று வென்றிருந்தாலும் 2வது போட்டியில் மிட்செலுக்கு கொடுத்த எல்.பி.தீர்ப்பு இந்திய வெற்றியைத் தீர்மானித்ததும், 3வது போட்டியில் அதிரடி தொடக்க வீரர் டிம் செய்ஃபர்ட்டுக்கு தோனி செய்த ஸ்டம்பிங் தீர்ப்பும் உஷ் கண்டுக்காதீங்க தருணமா என்று கேள்வி எழுந்து வரும் நிலையில் ஐசிசி, மற்றும் நியூசிலாந்து நடுவர்கள் குழுவில் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

 

அதாவது நடுவர் தீர்ப்புகளின் தரம் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

மிட்செல் அவுட் தீர்ப்பில் ஸ்னிக்கோ மீட்டர் காண்பித்த அடையாளத்தை மட்டை, கால்காப்பில் பட்டதாக நினைத்து களநடுவர் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு அவுட் என்றார் 3வது நடுவர் ஷான் ஹெய்க். ஆனால் ஹாட்ஸ்பாட்டில் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டுச்சென்றதைக் காட்டியதை ஹெய்க் புறக்கணிக்க சர்ச்சை முளைத்தது.

 

இந்நிலையில் நியூஸிலாந்து களநடுவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமன மேலாளர் ஷெல்டன் ஈடன் வைட்ரி நியூசிலாந்து ஊடகம் ஒன்றில் தெரிவிக்கும் போது 3வது நடுவர் ஹெய்க் செய்தது பெரும் தவறு என்பதை ஒப்புக் கொண்டார்.

 

இது பற்றி மீடியாக்களில் வர்ணனையாளர்கள், நிபுணர்கள் கடுமையாக விமர்சிக்க ஹெய்க் அதனால் பாதிக்கப்பட்டார் என்கிறார் வைட்ரி. அதாவது நடுவர் குழுவை தான் கைவிட்டு விட்டதாக அவர் நினைத்து வருந்தினார் என்கிறார் வைட்ரி.

 

சர்வதேச போட்டிகளில் நடுவரின் எந்த ஒரு தீர்ப்பும் ஐசிசி-யால் பதிவு செய்யப்பட்டு ஆராயப்பட்டு வருகிறது. நடுவர்கள் தங்கள் தவறுகளை தாங்களே திருத்திக் கொள்ள இது உதவுகிறது. ஆனால் பொதுவாக கிரிக்கெட் வாரியங்கள் நடுவர் தீர்ப்புகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்வது வழக்கமல்ல.  ஆனால் வைட்ரி தவறை ஒப்புக் கொண்டுள்ளார்.

 

அதே போல் 3வது டி20 போட்டியில் டிம் செய்ஃபர்ட் 25 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 43 ரன்கள் என்று வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கும் போது குல்தீப் யாதவ் பந்து ஒன்று அவரது தடுப்பைத் தாண்டி தோனியிடம் செல்ல அவர் பைல்களைத் தட்டி விட்டார். ஆனால் செய்ஃபர்ட் அதற்குள் தன் காலை உள்ளுக்குள் கொண்டு வந்து விட்டார், குறைந்தது விதிப்படி அவரது காலின் ஒரு பகுதி க்ரீசிற்குள் இருந்ததைப் பார்த்தோம். ஆனால் 3ம் நடுவரான கிறிஸ் பிரவுன் அது ஸ்டம்பிங்தான் என்று தீர்ப்பளித்தார். இது பற்றி வைட்ரி கூறும்போது, “நாங்கள் இன்னும் அந்தப் போட்டியின் சீராய்வை முடித்து விடவில்லை. இவற்றையெல்லாம் முடிந்து விட்டன என்று தூசி தட்டி ஒளித்து வைக்க முடியாது” என்றார்.

 

இல்லாத ஸ்டம்பிங் அவுட்டை முன் வைத்து ஊடகங்களில் சில ‘பின்னால் தோனி இருக்கும் போது எச்சரிக்கை’ என்று தோனியின் ஸ்டம்பிங்கை விதந்தோதி மின்னல் வேக ஸ்டம்பிங், ஆச்சா... போச்சா என்று புகழ்ந்து தள்ளின, ஐசிசி உட்பட. தோனி பிம்பக் கட்டமைப்பை ஓய்வு ஒழிச்சல் இல்லாது செய்து வரும் சில ஊடகங்களுக்கு அது நாட் அவுட் என்று தெரியாதா? தெரிந்தேதான் இவையெல்லாம் நடைபெற்று வருகிறது.

 

இந்தப் பிம்பக்கட்டமைப்பு வலைப்பின்னலைக் கடந்து வந்து இளம் விக்கெட் கீப்பர்கள், அதாவது விக்கெட் கீப்பிங்கையே கிரிக்கெட் வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் இளம் விக்கெட் கீப்பர்கள் , எப்படி இந்திய அணிக்குள் நுழைய முடியும்? என்பதே நம் கேள்வியாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x