Last Updated : 28 Jan, 2019 12:46 PM

 

Published : 28 Jan 2019 12:46 PM
Last Updated : 28 Jan 2019 12:46 PM

ஷமி, பாண்டியா அபாரம்: இந்திய அணிக்கு 244 ரன்கள் இலக்கு; கடைசி 7 விக்கெட்டுகளை 65 ரன்களில் இழந்த நியூசி.

முகமது ஷமி, ஹர்திக் பாண்டியாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் மவுண்ட் மவுங்கினியில் நடந்துவரும் 3-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 49 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பிசிசிஐ விதித்த தடை நீக்கப்பட்ட பின் விளையாட வந்த ஹர்திக் பாண்டியா கட்டுக்கோப்பாக  பந்துவீசி  2விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களால் ரன் குவிக்க முடியவில்லை என்பதே நிதர்சனம்.  கடந்த இரு ஒருநாள் போட்டிகளிலும் விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவ் இந்த போட்டியில் எந்தவிதமான விக்கெட்டுகளையும் வீழ்த்தவில்லை.

ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி 59 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோஸ் டெய்லர், லாதம் கூட்டணி 119 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இதில் டெய்லர் 7 ரன்களில் சதத்தை தவறவிட்டு 93 ரன்களில் ஆட்டமிழந்தார். லாதம் 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இருவரும் ஆட்டமிழந்தபின் விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கியது. கடைசி 65 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை நியூசிலாந்து அணி இழந்தது.

பேட்டிங்கிற்கு சாதமாக இந்த பிட்சில் நியூசிலாந்து வீரர்கள் மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். குறிப்பாக நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் முன்ரோ, கப்தில் இருவரும் கடந்த இரு போட்டிகளில் வெளிப்படுத்தியதைப் போல் இந்த போட்டியிலும் தொடர்ந்தது

தோனி இல்லை

டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் பேட்டிங்கை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியில் கிராண்ட்ஹோமேக்கு பதிலாக சான்ட்னர் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. தோனிக்கு நேற்று பயிற்சியின் போது தசைப்பிடிப்பு ஏற்பட்டதையடுத்து, அவர் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் களமிறக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பியதால், விஜய் சங்கருக்கு பதிலாக பாண்டியா வாய்ப்புப் பெற்றார்.

விக்கெட் சரிவு

கப்தில், முன்ரோ ஆட்டத்தைத் தொடங்கினார்கள். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே முன்ரோ பேட்டில் எட்ஜ் எடுத்தது ஆனால், அதிர்ஷ்டவசமாக ஆட்டமிழக்கமில்லை. ஷமி 2-வது ஓவரை வீசினார். 3-வது பந்தில் முன்ரோ பவுண்டரி அடித்தார், 4-வது பந்தில் அருமையான கேட்ச் அதை தினேஷ் கார்த்திக் முயன்றும் பிடிக்க முடியவில்லை.  ஆனால், கடைசிப் பந்தில் ஆப் சைட் விலகிச் சென்ற பந்தை முன்ரோ பேட்டால் தொட அது ஸ்லிப்பில் நின்றிருந்த ரோஹித்திடம் சரணடைந்தது. முன்ரோ 7 ரன்னில் வெளியேறினார். 10 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து.

இலங்கைத் தொடரில் இருந்து முன்ரோ மிகமோசமாக பேட் செய்துவருவதால், நியூசிலாந்து அணியில் இருந்து விரைவில் கழற்றிவிடப்படுவார், அல்லது உலகக்கோப்பை அணியில் இடம் பெறாத நிலைக்கு தள்ளப்படுவார் எனத் தெரிகிறது.

2-வது விக்கெட்டுக்கு கேப்டன் வில்லியம்ஸன், கப்திலுடன் இணைந்தார். நிதானமாக  வில்லியம்ஸன் பேட் செய்ய, புவனேஷ்குமாரின் 5-வது ஓவரில் ஒருபவுண்டரி, சிக்ஸர் விளாசினார் கப்தில்.  மீண்டும் 7-வது ஓவரை புவனேஷ்குமார் வீசனார். முதல் பந்திலேயே தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து  கப்தில் 13 ரன்களில் பெவிலியன் திரும்பினார். நியூசிலாந்து தொடக்க பேட்ஸ்மேன்கள் இருவரும் மிகவும் அற்பத்தனமாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். தொடக்கூடாத பந்துகளை தொட்டு எளிதாக விக்கெட்டுகளை இந்த முறையும் இழந்துள்ளனர்.

அடுத்துவந்த ரோஸ் டெய்லர், வில்லியம்ஸனுடன் சேர்ந்தார். இருவரும் பொறுமையாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். 12 ஓவரில் நியூசிலாந்து 50 ரன்களை எட்டியது. 17-வது ஓவரை சாஹல் வீசினார். மிட்விக்கெட் திசையில் வில்லியம்ஸன் தூக்கி அடிக்க அதை பாண்டியா அருமையாக கேட்ச் பிடித்தார். வில்லியம்ஸன்  28 ரன்களில் வெளியேறினார்.

நிலைத்த கூட்டணி

4-வது விக்கெட்டுக்கு லாதம், டெய்லர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக பேட் செய்து விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்தனர். அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ரன்களைச் சேர்த்தனர். டெய்லர் 71 பந்துகளிலும், லாதம் 62 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர்.

இருவரையும் பிரிக்க பல பந்துவீச்சாளர்களை மாற்றிப்பயன்படுத்தியும் பிரிக்க இயலவில்லை. இருவரின் பேட்டிங்கால் அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது.

38-வது ஓவரை சாஹல் வீசியதுதான் திருப்பு முனையாக அமைந்தது. 3-வது பந்தை லாதம் அடிக்க முற்பட்டபோது, மிட்விக்கெட் திசையில் ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 119 ரன்கள் சேர்த்தனர். இந்த தொடரிலேயே அதிக ரன்கள் சேர்த்த கூட்டணி இவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மோசமான பேட்டிங்

அதன்பின் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் வருவதும், போவதுமாக இருந்தனர். அடுத்துவந்த நிகோலஸ் 6 ரன்னில் பாண்டியா பந்துவீச்சில் தினேஷ் கார்த்திகிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சான்ட்னர் களமிறங்கினார். இவரும் நிலைக்கவில்லை

பாண்டியா வீசிய 42-வது ஓவரில் சான்ட்னர் 3 ரன்கள் சேரத்தநிலையில், கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் அதிரடியாக அரைசதம் அடித்த  பிரேஸ்வெல் களமிறங்கினார்.

டெய்லருடன், சேர்ந்த பிரேஸ்வெல் அதிரடியாக சில பவுண்டரிகளை விளாசினார். சதத்தை நோக்கி டெய்லர் முன்னேறினார்.

ஷமி வீசிய 46-வது ஓவரில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து டெய்லர் 93 ரன்களில் ஆட்டமிழந்து சத்ததை தவறவிட்டார். இவரின் கணக்கில் 9பவுண்டரிகள் அடங்கும்.

அடுத்து வந்த சோதி, பிரேஸ்வெலுடன் சேர்ந்தார். ஷமி வீசிய 48-வது ஓவரில் கோலியிடம் கேட்ச் கொடுத்து சோதி 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

புவனேஷ் குமார் வீசிய 49-வது ஓவரில் இரு விக்கெட்டுகள் விழுந்தன. பிரேஸ்வெல் 15 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட் ஆகினார். கடைசிப் பந்தில் 2 ரன்கள் சேர்த்திருந்த போல்ட் ஷமியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

49 ஓவர்கள் முடிவில் 243 ரன்களுக்கு நியூசிலாந்து அணி ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, சாஹல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x