Published : 28 Jan 2019 10:47 AM
Last Updated : 28 Jan 2019 10:47 AM
நியூசிலாந்து அணியை வெளுத்துவாங்கி வரும் இந்திய அணியைப் பார்த்து கோலி அணியிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று பொதுமக்களுக்கு கிண்டலாக நியூசிலாந்து கிழக்குமாவட்டபோலீஸார் ட்விட்டரில் வேடிக்கையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேசமயம், தங்கள் நாட்டு அணி வீரர்கள் மிக மோசமாக விளையாடி வருவதையும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டி, கிண்டல் செய்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்த இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் தொடர்களை வென்று வரலாற்று வெற்றி பெற்றது. அங்கிருந்து நியூசிலாந்து சென்ற கோலி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், டி20 தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் இரு ஒருநாள் போட்டிகளில் வென்று 2-0 என்று இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது. மவுண்ட்மவுங்கினியில் இன்று 3-வது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.
கடந்த இரு போட்டிகளிலும் இந்தியாவின் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல் ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்கத் தெரியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். இந்நிலையில் 3-வது ஆட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், நியூசிலாந்து கிழக்கு மாவட்ட போலீஸார் நியூசிலாந்து அணியை கிண்டல் செய்த ட்விட்டர் செய்தி வைரலாகி வருகிறது.
அதில் " நம் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து ஒரு குழு (இந்திய அணி) விளையாடிவருவது தொடர்பாக பொதுமக்களுக்கு நியூசிலாந்து போலீஸார் எச்சரிக்கை விடுக்கிறது. நேப்பியரிலும், மவுண்ட் மவுங்கினி நகரிலும் கடந்த வாரம் அப்பாவி நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களை இந்த குழுவினர்(இந்திய அணி) காட்டடி அடித்து துவைத்திருக்கிறார்கள். ஆதலால், மக்கள் பேட், பந்து ஆகியவற்றை எடுத்துச் செல்லும் போது சிறிது கூடுதல் கவனத்துடன் இருங்கள்" எனத் தெரிவித்துள்ளனர்.
அதாவது, நேப்பியர், மவுண்ட் மவுங்கினி நகரில் நடந்த 2 ஒருநாள் போட்டிகளிலும் நியூசிலாந்து அணியை இந்திய அணியினர் நொறுக்கி எடுத்துவிட்டார்கள். ஆதலால், மக்கள் பேட், பந்துகளை எடுத்துச் சென்றால், இந்திய அணியிடம் சிக்கி விடாதீர்கள் என்று தங்கள் நாட்டு அணியை கிண்டல் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT