Published : 23 Dec 2018 07:40 AM
Last Updated : 23 Dec 2018 07:40 AM

`ஹீரோ ஐ லீக்` கால்பந்து; சிசிஎஃப்சி-யை வென்றது ரியல் காஷ்மீர் அணி

கோவையில் நேற்று நடைபெற்ற `ஹீரோ ஐ லீக்` கால்பந்துப் போட்டித் தொடரில், சென்னை சிட்டி எஃப்.சி. அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது ரியல் காஷ்மீர் எஃப்.சி. அணி.

கோவை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில், சென்னை சிட்டி எஃப்.சி. அணியும்,  ரியல் காஷ்மீர் அணியும் மோதின.

பலம் மிக்க இரு அணிகளும் மோதும் போட்டி என்பதால், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். வழக்கமாக ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக ஆடும் சென்னை சிட்டி அணியினர் நேற்று முதல் இடைவேளை வரை தற்காப்பு ஆட்டத்தையே தொடர்ந்தனர். 30-வது நிமிடத்தில் சென்னை சிட்டி எஃப்.சி. அணிக்கு கோல் போட வாய்ப்புக் கிடைத்தும், நூலிழையில் தவறியது. இடைவேளை வரை எந்த அணியும் கோல்போடவில்லை.

இடைவேளைக்குப் பிறகும், சென்னை சிட்டி எஃப்.சி. அணி சில வாய்ப்புகளை நழுவவிட்டது. தொடர்ந்து இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர். இதற்கிடையில், 77-வது நிமிடத்தில் ரியல் காஷ்மீர் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி,  ரியல் காஷ்மீர் அணி வீரர் கோஃபி டெட்டே கோல் போட்டார். இதையடுத்து, 1-0 என்ற கோல் கணக்கில் ரியல் காஷ்மீர் அணி முன்னிலை வகித்தது. ஆட்ட முடிவில் கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்ட போதும், பின்னர் எந்த அணியும் கோல்போடவில்லை. இதையடுத்து, 1-0 என்ற கோல் கணக்கில் ரியல் காஷ்மீர் அணி வெற்றி பெற்றது.

சென்னை சிட்டி அணி வீரர் ரொபேர்டோ ஆட்ட நாயகனாக தேர்வு  செய்யப்பட்டார். அவருக்கு, தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பரிசு வழங்கினார். சென்னை சிட்டி எஃப்.சி. அணி உரிமையாளரும், `தி இந்து` குழும இயக்குநருமான ரோஹித் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வரும் 29-ம் தேதி மாலை 5 மணியளவில், கோவை நேரு விளையாட்டு அரங்கில் சென்னை சிட்டி எஃப்.சி. அணியும், ஷில்லாங் லெஜாஸ் அணியும் மோதுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x