Published : 16 Dec 2018 07:29 PM
Last Updated : 16 Dec 2018 07:29 PM
7 தொடர் இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய பாட்மிண்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து, பேட்மிண்டன் உலக டூர் பைனல்சில் ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகுஹராவை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்து பெருமை சேர்த்தார்.
இந்த வரலாற்று வெற்றி குறித்து பி.வி.சிந்து கூறியதாவது:
இறுதிப் போட்டிக்கு வருவதும் தோற்பதுமாக இருந்த எனக்கு இந்த வெற்றியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஆகவே இது இனிய நினைவாகவே இருக்கும். இந்த ஆண்டு இறுதி மிக உயர்ந்த நிலையில் எனக்கு முடிந்துள்ளது.
என்னிடம் தொடர்ந்து இறுதிப் போட்டிகளில் தோல்வி பற்றி பலரும் கேள்வி எழுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இனி இந்தக் கேள்வி என்னை நோக்கி வராது என்று கருதுகிறேன். இப்போது தங்கம் வென்றுள்ளேன் என்று என்னால் பெருமையாகக் கூற முடியும். நான் உண்மையில் பெருமையடைகிறேன்.
கடந்த ஆண்டு ரன்னராக முடிந்தேன். இப்போது நான் வின்னர். ஆகவே இது எனக்கு அருமையான ஒரு தொடராக அமைந்தது. அனைத்துப் போட்டிகளிலும் வென்றுள்ளேன் என்பதில் பெருமையடைகிறேன்.
அடுத்ததாக இந்தியன் லீக் வருகிறது. அதில் சிறப்பாக ஆடி இந்த ஆண்டை இனிய ஆண்டாக நிறைவு செய்வேன்.
இது நல்ல போட்டி, நிறைய ரேலிகள் நடந்தன. கடந்த இறுதிப் போட்டி என் நினைவில் வந்தாலும் இந்தப் போட்டியில் கடினமாக கவனம் செலுத்தினேன்.
ஒகுஹராவுடனோ, யாமகுச்சியுடனோ நான் மோதும்போது இறுதிப் போட்டிகளில் நான் ஒருபோதும் எளிதாக உணர்ந்ததில்லை. இன்றும் கூட 30-40 ராலிகளை விளையாடினோம். 100% முயன்றேன் வென்றேன். ஒகுஹராவும் பிரமாதமாக ஆடினார்.
அடுத்த ஆண்டு ஒலிம்பிக் தகுதி ஆண்டாகும். மலேசியா, இந்தோனேசியா தொடர்கள் உள்ளன.
இவ்வாறு கூறினார்.
வரலாற்றுச் சாதனைக்காக பி.வி.சிந்துக்கு நாடு முழுதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT